உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

மறைமலையம் 22

அவ்வின்பம் ஒன்றையும் பற்றாது தனித்து நிற்பதின்றி உலகு உயிர்களிலெல்லாம் நிறைந்து நிற்கும் ஒரு முழுமுதற் பெரும் பொருளான கடவுளைப் பற்றிக் கொண்டே நிற்பதொன்றா கலானும், அத் தன்மையரான கடவுளைத் தலைக்கூடினார்க் கன்றி அது வாயாதாகலானும், இறைவனை இறுகப் பற்றிக் கொண்ட மாணிக்க வாசகப் பெருமான்றன் மன மொழி மெய்கள் எல்லாவற்றையும் அப் பேரின்ப வெள்ளமானது தேக்கி அவரது திருவாயின் வழியே திருவாசகமாய்ப் பெருக் கெடுத்துப் போந்ததாகலானும் அந் நூலுக்கு அத் திறம் உளதாயிற்றென்று அறிதல் வேண்டும். கற்கண்டின் பாகும் முப்பழச் சாறும் நறுநெய்யும் ஒருங்கு கலந்த அடிசில் தீஞ்சுவைத் தெள்ளமிழ்தமாய்த் திகழ்தல் காண்டுமன்றே; அதுபோற் சிவத்தின் எல்லையற்ற பேரின்பத்தில் முழுதுந் தோய்ந்த வாதவூராரின் மன மொழி மெய்களும் பேரின்ப வுருவாய்த் துலங்கலாயின. இளவள ஞாயிற்றொடு கூடிநிற்கும் மாசற்ற நீலவான் பரப்பெல்லாம் அதன் பேரொளியால் ஊடுருவப் பெற்று மிளிர்தல் காண்டுமன்றே: அதுபோற் சிவத்தின் எல்லையற்ற அறிவாற் கவரப்பெற்ற அடிகளின் தூய அறிவும் அளப்பிலாச் சிறப்பினதாய்ச் சுடர்வதாயிற்று. சுடர்ந்தெரி தீயின் சேர்க்கையால் தூய ஆன்இழுது நீராளமா யுருகி யொழுகுதல் காண்டுமன்றே; அதுபோற் சிவத்தின் வரம்பிலடங்கா அருளாலும் அன்பாலும் நிறையப் பெற்ற அடிகளின் திருவுள்ளமும் அன்பாலும் அருளாலும் பொங்கித் ததும்பித் திருவாசகம் பொழிவதாயிற்று என்க.

உலகில் வேறெங்குங் காணப்படாத ஒரு தனித் தெய்வ மாட்சி மாணிக்கவாசகப் பெருமான் ஒருவரிடத்தே மட்டுங் காணப்படலான இந் நுட்பத்தை ஆழ்ந்து ஆராயுங்கால், அஃது எல்லாம் வல்ல கடவுளே வலியவந்து அவரை ஆட்கொண்ட பேரருட்டிறத்தின் பெருவிளைவாதல் புலனாகா நிற்கும். கடவுள் ஒருவர் உண்டு என அதன் இருப்பை மட்டும் உணர்வார்க்குப் பொதுவகையால் ஒரு மெய்யறிவு விளங்குமே யல்லாமல், அதனின் மேற்பட்ட ஓர் ன்ப வுணர்வு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/55&oldid=1587501" இலிருந்து மீள்விக்கப்பட்டது