❖ மறைமலையம் - 3 ❖ |
அதிசயமான இந்த உலகம் நமக்கு அண்டையில் இருப்பதை மெய்யாக உணர்ந்து, அறிவு விரியாத எத்தனை ஆடவரும் பெண்டிரும் நமக்கு எவ்வளவு அருகிலிருக்கிறார்களென்பதை அறியுங்கால், நாம் உரப்பான தூய நினைவுகளை நினைக்க வேண்டுவது எத்துணை அவசியம் என்பதை நாம் பாராட்டிப் பேசுவோம். வசீகர முறையை உற்று நோக்கினால் நாம் நம்மிடம் வருவிக்கும் உயிர்கள் நம் எண்ணங்களோடு ஒத்த இயல்புடையன வாயிருக்கின்றன; ஆகையால், ஒளியும் உதவியும் உயர்ச்சியும் வாய்ந்த நினைவுகளை நினைப்பதிலேயே நாம் கருத்தாயிருந்து, நம்மிடம் நல்லவைகளே அணுகும்படி இழுக்க வேண்டும்.
மிகச் சிறந்ததையே பெற வேண்டுமென்னும் விருப்பத்தை உருவேற்றி, உங்களுக்கு உதவி செய்யக்கூடிய வரையே உங்களிடம் இழுக்க நீங்கள் முயலும்வரையில் ஆன்மதத்துவ வாழ்க்கைக்குரிய உயர்ந்த மண்டலங்களிலேனும் ஒளியாகாயத்திலேனும் சிறிதும் அபாயமில்லை; ஏனெனில், அங்கே உங்கள் வலியுள்ள மானத ஆகாயமே உங்களைச் சூழ்ந்திருத்தலால், அதுவே உங்களை எப்போதும் பாதுகாக்கும்.
யான் நியூஸீலண்டில் வைத்து நடத்திய மந்திர வகுப்பின் கண் ஒருகால் எனக்கொரு புதிய அனுபவம் உண்டாயிற்று. அப்பியாசம் முடிந்தபிறகு அவ் வகுப்பு மாணவகரில் ஒருவர் தமக்கு அன்றிரவு வியப்பான ஓரனுபவம் உண்டாயிற்றென்று சொன்னார். அதன்மேல் அவர் சென்றிருந்த இடம் எதுவென்று வினவினேன்; அதற்கவர் தாம் கடிகார கோபுரத்தைச் சுற்றிக் கொண்டிருந்ததாகக் கூறினர். அவர் ஆன்மசக்தி பெரிதும் மிகப் பெற்றவர் என்பதனை யான் அறிவேன்; ஆனால், அவர் இதற்கு முன் தாம் உடம்பைவிட்டுச் சென்றதாகச் சொன்னதே யில்லை. அங்கே எவரையேனும் பார்த்ததுண்டா வென அவரைக் கேட்டேன்; தாம் இருவரைக் கண்டதாகவும் அவர்கள் பெயர் இன்னவை என்றும் அவர் மறுமொழி புகன்றார். பின்னர் யான் விசாரணை செய்ததில் அவ்விருவரும் பிசகில்லாமல் விவரித்துச் சொல்லப்பட்டன ரென்றும், அவர் சுட்டிச் சொல்லிய நேரத்தில் அவ்விருவரும் அவ்விடத்தைக் கடந்துபோய்க் கொண்டிருந்தன ரென்னும் கண்டுகொண்டேன். ஆகவே, சூக்கும ஒளியா காயத்தின்கண் அறிவு நிகழப் பெறுதல் குறிப்பிட்ட சிலர்க்கு