❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖ |
முதலிற் கருதுவதாயும் இருத்தல் வேண்டும். அங்ஙனமானால், ஒருவன் தனக்குத் தொடர்புடைய நண்பர் பலருள் ஒருவர்க்கு நன்மை செய்ய விரும்பினால் அது மற்றொருவர்க்குத் தீமையாகவும் முடியக் காண்கின்றோமாதலால், பிறர் எல்லார்க்கும் நன்மையே செய்ய வேண்டுமென்றல் யாங்ஙனங் கூடுமெனின்; ஒருவர்க்கு நன்மை செய்யுங்கால் மற்றவர்க்கு அதனால் தீமை வருவதுபோற் றோன்றுமாயினும் அவரவர் நிலைமைகளைச் செவ்வனே ஆராய்ந்து பார்த்து நடுவுநிலைமைக்கு ஏற்றபடி செய்தால் அதனால் ஒருவர்க்கு நன்மையும் மற்றொருவர்க்குத் தீமையும் வருமாயினும் அதுபற்றி அவர் இகழப்படார்.
பத்தாயிரம் பொன் பெறுதற்குரிய ஒருவர் வறுமையால் நலிய, அதற்கு உண்மையில் உரியரல்லாத மற்றொருவர் அப்பொன் முழுமையும் தாமே கவர்ந்துகொண்டு அதனை மற்றவர்க்குக் கொடாது வன்கண்மை செய்தால், நடுவு தீர்க்குமொருவர் அப்பொன்னை அவரிடத்தினின்றும் பிடுங்கி மற்றவர்க்குக் கொடுக்குங்கால் அஃது ஒருவர்க்கு நன்மையும் மற்றொருவர்க்குத் தீமையுஞ் செய்வதுபோற் றோன்றுமாயினும், அதனை உண்மையால் ஆராய்ந்து பார்ப்பவர்க்கு அஃது அங்ஙனம் ஆகாமை நன்கு விளங்கும். ஆகவே, ஒருவர்க்குண்மையி லுரியதன்றாய்ப் பயன்படாத தொன்றைப் பயன்பெறுதற்குரிய பிறரொருவர்க்குச் சேர்ப்பித்தல் நடுவு நிலைமைக்குப் பழுதாமாறில்லை. இம்முறையால் நோக்குமிடத்து நடுவுநிலைமை வழுவாது பிறர் நிலைமைகளை ஆராய்ந்து அவ்வவர்க்கு ஏற்றபடியாக நன்மை செய்தற்கு நினைவை முனைக்க நிறுத்துதல் சிறந்த நெறியேயா மென்க.
அங்ஙனமாயினும், நினைவை வலிவேற்றுவதற்கும் பிறரது நன்மையைக் கருதுவதற்கும் உள்ள இயைபு என்னையோ வெனின்; பிறரது நன்மையைக் கருதுவதற்கும் உள்ள இயைபு என்னையோ வெனின்; பிறரது நன்மையைக் கருதுவோரிடத் தெல்லாம் இறைவனருள் முனைத்து விளங்கும். முழுமுதற் பொருளான கடவுள் எக்காலும் உயிர்களின் நன்மையையே கருதிப் பல வேறுலகங்களையும் அவ்வுலகத்துப் பொருள்களையும் பலதிறப்பட்ட உயிர்களுக்கும் பலதிறப்பட்ட உடம்பு களையும் எங்கும் நிறைந்து நின்று ஓயாது ஆக்குபவரா