இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖ |
மூன்றல்லது நான்காம்நாள் இரவும் யான் இரண்டுமணி நேரம் வரையில் அறிதுயிலிற் செலுத்தப் பட்டுக் கிடந்தேன்; அதனால் விளைந்த நன்மையை, நேற்றுக் காலையில் யான் நான்கு மைலுக்கு மேலும், இன்றைக் காலையில் ஆறு மைலுக்கு மேலும் நடக்க வல்லனாயிருப்பது கொண்டு தாங்களே தெரிந்து கொள்ளலாம்.”
இதுகாறும் எடுத்துக் காட்டிய உண்மை நிகழ்ச்சிகளைக் கொண்டு ஒருவரைத் தம் வழிப்படுத்தலும், அவர்க்குள்ள நாட்பட்ட கொடிய நோய்களை நீக்குதலும், பிளவைக்கட்டிகள் புண்கள் முதலியவற்றை அவர் அறியாமலே அறுத்துத் தீர்த்தலும் நினைவற்ற ஆழ்ந்த அறிதுயிலின்கண் அவரைச் செலுத்துதலால் எளிதில் முடிக்கப்படும் என்பதை நன்குணர்ந்து கொள்க.