332
17. தெளிவுக்காட்சி
இனிநடைத்துயிலின் பயன்களைப்பற்றிச் சிறிது பேசுவாம். நடைத்துயிலின்கட் செலுத்தப்பட்ட ஒரு தூய உயிர் இறந்தகால நிகழ்கால எதிர்கால நிகழ்ச்சிகளைத் தெரிந்துரைக்க வல்லதாதலை மேலே விளக்கிப் போந்தாம். இந்நடைத் துயிலானது நினைவற்ற ஆழ்ந்த அறிதுயிலினும் ஆழமாய்ச் சென்றபின் வருவதாகும். இத்துயிலில் இருப்போர் அதிலிருக்கும் வரையில், இயற்கையாக விழித்திருப்போரைப் போற் பேசுதலும் நடத்தலுஞ் செய்வராயினும், அவரது நினைவு அப்போது மிக நுண்ணிய அறிவுடம்பைப் பற்றிக்கொண்டு இயங்குதலால், அவர் இயற்கையாக விழித்திருக்கும் நிலையிற் காணமாட்டாத, மறைந்த அரும்பெருங் காட்சிகளை யெல்லாங் காணமாட்டுவர். இது தவவொழுக்கத்தில் நிற்போர்க்குத் தானாகவே வருவதொன்றாகையால், தவக்காட்சி யென்றும் வழங்கப்படும். அங்ஙனமாயின் அருந்தவத்தோர்க்கும், இவ்வறிதுயிலில் இருப்போர்க்கும் வேறுபாடென்னை யெனின்; அருந்தவத்தோர் தாமாகவே இடையறாது செய்து போதருந் தவமுயற்சியால், தமதுணர்வினை அறியாமையினின்றும் பிரித்து விளங்கச்செய்து, தாம் வேண்டியபோது இவ்வுணவுடம்பு, உயிர்ப்புடம்பு, மனவுடம்பு, அறிவுடம்பு, இன்பவுடம்பு (வடநூலார் இவற்றை அன்னமயகோசம், பிராணமயகோசம், முறையே மனோமயகோசம், விஞ்ஞானமயகோசம், ஆனந்தமயகோசம் என வழங்குவர்) என்னும் ஐவகை யுடம்புகளினும் நடைபெறச்செய்து ஆண்டாண்டு நிகழும் மறைபொருணிகழ்ச்சிகளை யெல்லாந் தாமாகவே எளிதிலுணரப் பெறுவர்; அவர்கட்கு மறதியும் அறியாமையும் உளவாகா. மற்றுப் பிறர் ஒருவரது உதவியால் நடைத்துயிலின்கட் செலுத்தப்படுவாரோ தாமாகவே அறிவுடம்பிற் செல்லமாட்டாமையோடு, ஆண்டு நிகழ்ச்சிகளையுந் தாமாகவே அறிந்துரைக்க மாட்டுவார் அல்லர்; அது