உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5



மறைமலையடிகளார் மாண்பு


தனித்தமிழ்க் கொள்கையின் தந்தையார் மறைமலையடிகளார்! அக்கொள்கையூற்றம் அவர்க்கு இளமைப் பருவத்திலேயே அரும்பி மலர்ந்தது. அவ்வுணர்வு தோன்றியதற்குப் பின்னர்ச் சிறிதேனும் அசைவின்றிக் கடைப்பிடியாகக் கொண்டு காலமெல்லாம் கடமையாற்றியவர் அவர்.

சங்கத் தமிழ் நூல்களுள் பலவற்றையும் அவற்றின் உரைகளையும், தொல்காப்பியம் திருக்குறள் ஆகிய நூல்களையும் அவற்றின் உரைகளையும் சைவசித்தாந்த நூல்களையும் அவற்றின் உரைகளையும் களஞ்சியத்தும் கருவூலத்தும் வைத்துக் காப்பார்போல மனத்தகத்துத் தம் பதினைந்தாம் அகவை தொட்டு இருபத்தொன்றாம் அகவைக்குள்ளேயே (1891-1897) பதித்துக்கொண்டார்.அதனால், அவரை இருபதாம் அகவையில் (1896) கண்டு நுண்ணிதின் நோக்கிய பேராசிரியர் பெ. சுந்தரனார்,

"மேலை நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுகளுடன் எழுதவும் ஆராயவும் வல்லுநர் ஆவார் என்பது என்னுடைய சிறந்த எண்ணம்” என்று சான்று வழங்கினார்.

பாட்டும் உரையும் ஈட்டும் தேனெனக் கூட்டில் சேர்த்துக் கொண்ட கொங்குதேர் வாழ்வும், இயற்கை உந்துதலும், கூர்த்த மூளையுமே அவர்க்குத் ‘தனித் தமிழ் இயக்கத் தந்தை' என்னும் பேற்றை நல்கினவாம்.

அடிகளாரின் வீறுசால் நோக்கும் தடைவிடைத் திறனால் தம் கொள்கை நிறுவிக் கொள்ளும் கொற்றமும் கண்டு கண்டுதுய்த்த துய்ப்பே, தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களின் வழியாக,

"அற்றை நக்கீரனாரும் பிற்றைச் சிவஞான முனிவரும் ஓருருக்கொண்டு வேதாசலனாராகப் போந்து இற்றைத் தமிழ் வளர்க்கிறார்” என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/38&oldid=1624427" இலிருந்து மீள்விக்கப்பட்டது