உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16

❖ மறைமலையம் - 3 ❖

‘மரணம்’ என்னுஞ் சொல்லைக் கேட்டவுடனே திடுக்கிடுவோர், மரணத்திற்குப்பின் ஆத்மாவுக்கு உண்டாகும் சக்தியையும், இன்பத்தையும் அறிவார்களானால் மரணம் அடைந்த பிறகும் தம் ஆத்மாவானது தமக்கு உற்றாரா யுள்ளவர்களோடு உறவாடி மகிழக்கூடும் என்றும், அவர்களுக்குப் பலவகையான உதவிகளும் செய்யக்கூடும் என்றும் அறிந்து மரணத்திற்குச் சிறிதும் அஞ்சாமல் வாழ்வர். பாவ வழிகளிற் புகுந்து கொலைத்தொழிலிற் பழகி மரணத்திற்குத் துணிந்து தம்முயிரைத் துரும்பு போல் நினைத்திருப்பவர்கள், மரணம் அடைந்தபின் தம் கெட்ட செய்கைகளால் தாம் அடையும் பெருந்துன்பத்தை அறிவார் களானால் இந்தப் பிறவியில் தம்மைத் திருத்திக்கொண்டு எவ்வளவோ நல்ல காரியங்களைச் செய்து சிறப்படைவார்கள். ‘நாத்திகம்’ பேசிக்கொண்டு இந்த உடம்போடு எல்லாம் போய்விடும் என்று சொல்லித் திரிபவர்கள், தம் உடம்பு அழிந்தாலும் தம் உயிர் அழியாமல் நின்று பலவகையான மாறுதல் அடைந்து பல பிறவிகளிற்பட்டுச் சுழல்வதை எள் அளவேனும் அறிவார்களானால், தாம் பிசகாக எண்ணிய எண்ணங்களை எல்லாம் மாற்றித் தாம் விருத்தி அடைவதற்கான வழிகளைத் தேடிக் கொண்டு சுகமாய் வாழ்வார்கள்.

ஆகவே, மனிதர்கள் எல்லாரும் இந்தப் பிறப்பையே பெரியதாக எண்ணி, இனிவரும் பிறப்புக்களையும், இறந்த பிறகு ஆத்மா அடையும் நிலைமையினையும் சிறிதாவது விசாரியாமல் காலங்கழிப்பது மிகவும் பொல்லாதது. இன்றைக்கு உயிரோடு இருப்பவன் ஒருவன் நேற்று நான் உயிரோடு இருந்ததில்லை என்றாவது,நாளைக்கு நான் உயிரோடிருக்க மாட்டேன்; எல்லாம் இன்றோடு முடிந்து போயிற்று என்றாவது சொன்னால் அவனை மற்றவர்கள் எல்லாரும் பித்தம் பிடித்தவன் என்று சொல்வார் களன்றோ? நேற்றிருந்தவன் இன்றைக்கும் இன்றிருக்கிறவன் நாளைக்கும் உயிர்வாழ்தலை நாம் பிரத்தியட்சமாய் அறிந்து கொள்வதுபோல, முற்பிறப்பி லிருந்தவன் இப் பிறப்பிலும், இப் பிறப்பிலிருக்கின்றவன் இனிவரும் பிறப்பிலும் இருப்பான் என்பது திண்ணம். நேற்றுக் கட்டத்தொடங்கிய ஒரு வீடானது நேற்றே கட்டப்பட்டு முடிவுபெறாமல், இன்றும் நாளையும் கட்டப்படுதல் போல, முற்பிறவிகளில் நாம் கட்டத் தொடங்கிய மோட்ச வீடானது அப் பிறவிகளிலேயே முடிவுபெறாமல், இப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/49&oldid=1626086" இலிருந்து மீள்விக்கப்பட்டது