உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

மறைமலையம் - 30 -

பிறர்க்கு வறுமையால் வந்த துன்பத்தை நீக்குதற்பொருட்டுப் பொருளுடையார் அவர்க்குப் பொருளீந்து செய்யும் அறம் எத்துணை இன்பம் பயக்கின்றது. இதுபற்றி யன்றோ தெய்வப்புலமைத் திருவள்ளுவரும்,

“ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்துஇழக்கும் வன்க ணவர்'

என்று அருளிச் செய்தார். தமக்கும் பிறர்க்கும் நிகழும் இன்பம் இனைத்தென்பது உணர்ந்த இன்ப உணர்ச்சி உடையார்க்கன்றி, ஏனையோர்க்கு அறநினைவு சிறிதும் உளதாகாது. இவ்வுண்மை அறிவுடையார்க்கெல்லாம் இனிது விளங்கிக் கிடப்பவும், இது தானும் உணரமாட்டாது இன்பத்தினும் அறத்திற்கே புகுந்த மறுப்புரைக்காரர் உரை தொல்லாசிரியர் நூல்வழக்கிற்கும் ஏனை உலகியல் வழக்கிற்கும் மாறுகொண்டு போலியுரையாய் ஒழிந்தமை காண்க.

முதன்மைசொல்லிப்

எல்லா உயிர்க்கும் பொதுவான இன்ப உணர்ச்சியின் வாயிலாகவே அவ்வுயிர்கட்கு முயற்சி யுண்டாகநிற்கின்றது. அம்முயற்சியினாற் பின்னும் பின்னும் பிறவி வளர்ச்சி உரம் பெற்றுப் பிறவிக்கு வாராமல் அறியாமையில் அமிழ்ந்திக் கிடக்கும் உயிர்கள் பிறவிக்கு வந்து அறிவு கூடுகின்றன. இன்பமும் அறிவும் இவ்வாற்றாற் பெருகப் பெருக அறநினைவும் அறஞ் செய்யும் முயற்சியும் மக்கள்பால் முறை முறையே தலைப்படுகின்றன. அம்முறையினைக் கூர்ந்து பார்க்கும் வழி, இன்பத்தினால் முயற்சியும், அம்முயற்சியாற் பொருளும், அப்பொருளால் அறமும், அவ்வறத்தால் முடிவிற் பேரின்பமும் ஒன்றினொன்று உளவாய் வருகின்றன என்பதும், எல்லா அறிவும் முயற்சியும் இன்பத்தினின்றே தோன்றி இன்பத்தின் கண்ணே சென்று முடிகின்றன என்பதும் நன்கு தெளியக் கிடத்தலின், முற்றுணர்வு வாய்ந்த ஆசிரியர் தொல்காப்பியனார் இன்பத்தை முன்வைத்துப் பொருளை அதன்பின் வைத்து அறத்தை அதன்பின் வைத்துச் சூத்திரஞ் செய்தமுறையே உலக வழக்கொடும், நூல்வழக்கொடும் முழுதொத்து என்றும் அசையா வைரமலைபோல் திகழ்ந்து நிற்பதாம் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/119&oldid=1592285" இலிருந்து மீள்விக்கப்பட்டது