270
மறைமலையம் - 30 ×
4. தமிழ் - தமிழர்
தமிழர்க்குள்ள பெருமை யெல்லாம் அவர் தொன்று தொட்டுத் தூய்தாக வழங்கி வருந் தமிழ் மொழியினையே சார்ந்திருக்கின்றது.
திருவள்ளுவர் பிறப்பதற்கு முன் ஒரு நானூறு ஆண்டும், அவர் பிறந்த பின் ஒரு நூறு ஆண்டும் சேர்ந்து முடிந்த ஓர் ஐந் நூறாண்டும் தமிழ்மொழி மறுவற்ற மதிபோற் கலைநிரம்பி விளங்கிய காலமாகும். இக்காலத்திலே சிறந்த புலவர் பலர் தோன்றிப் பலவகையான அரிய பெரிய செந்தமிழ் நூல்கள் இயற்றினர்.
தமிழுக்குப் புறம்பான மொழிகளை ஆராய்ந்து சொல் கிறேன். தமிழுக்குள்ள சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை.
நமது இனிய செந்தமிழை மறப்பதும், பயிற்சி செய்யாமல் விட்டிருப்பதும் நமது உயிரையே நாம் அழிப்பதாய் முடியும்.
தமிழ் நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்களைக் குறைக்க வேண்டுமென்றும், அயல் மொழிகளிலுள்ள ஒலிகளைத் தமிழிற் சேர்த்துக் கொள்ள வேண்டு மென்றும், அப்போதுதான் தமிழ் வளர்ச்சியடையு மென்றும் கூறுவர் சிலர். நல்லது; தமிழ்ச் சொற்களிலுந் தமிழ் ஒலியினாலுந் தெரிவிக்கக் கூடாதவை இருப்பினன்றோ அயல்மொழிச் சொற்களையும் ஒலிகளையுஞ் சேர்த்தல் வேண்டும்? உலகத்தில் உள்ள எல்லாப் பொருள் களையும், எல்லா அறிவு இயல்களையும் தமிழ்ச் சொற்கள், தமிழ் ஒலிகள் கொண்டே செவ்வையாகத் தெரிவிக்கலாம் என்பதுயாம் எல்லாத் துறைகளிலும் புகுந்து எழுதியிருக்கும் நூல்களைச் சிறிது பார்த்தாலுந் தெரிந்து கொள்ளலாம்.