66
19. துறவு அறம் ஆகாமை
மேலும், இல்வாழ்க்கை யொன்றுமே அறனென வைத்துச் சொல்லப்படுதற்கு உரித்தாவ தன்றித், துறவு வாழ்க்கை அறம் எனப்படுதற்கு உரிமை யுடைத்தன்று; ஏனெனிற் பிறவுயிரின் துயர்களைவதூஉம், மக்கள் பிறரின் துன்பந் துடைப்பதூஉம் ஆகிய செயலை உண்மையாற் செய்வாரது நல்வினையே அறம் எனப்படும்; இவ்வாறு செய்யப்படும் அறம் பழைய நாளில் முப்பத்திரண்டு வகையாகச் செய்யப்பட்டு வந்த தென்பது,
66
'ஆதுலர்க்குச் சாலை, ஓதுவார்க்கு உணவு
அறுசமயத் தோர்க்கு உண்டி, ஆவிற்கு வாயுறை சிறைச்சோறு, ஐயந், தின்பண்டம், மகச்சோறு மகப்பெறுவித்தல், மகவளர்த்தல், மகப்பால் அறவைப் பிணஞ்சுடல், அறவைத் தூரியம், வண்ணார், நாவிதர், வதுவையாற்றல், நோய் மருந்து, கண்ணாடி, காதோலை, கண்மருந்து தலைக்கெண்ணெய், பெண்போகஞ், சுண்ணம், பிறர்துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தர், மடந், தடம், கா, ஆவுரிஞ்சு நடுதறி, ஏறுவிடுத்தல்,
விலைகொடுத்துக் கொலையுயிர் மீட்டல் விலக்குணா இச்செயல் முப்பத்திரண்டற மென்ப”
என்னும் பழைய வாகரநிகண்டால் தெளியப்படும் இங்ஙனமாக முப்பத்திரண்டு அறங்களைச் செய்யும் நிலை இல்லற வாழ்க்கைக்கு வாய்வதே யன்றித் துறவுக்கு வாயாது; ஆகவே, துறவினை அறம் என்னுஞ் சொல்லொடு புணர்த்துத் துறவறம் என வழங்குதலுஞ் சாலாது; அதனாலன்றோ தெய்வத் தொல்காப்பியர் ‘துறவறம்' என்னுஞ் சொற்றொடரைத் தமது விழுமிய முழுமுதல்நூலுள் யாண்டுமே வழங்காராயினர்.