பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

கதவு திறக்கப்பட்டது. உமர் உள்ளே வந்தார்.

பெருமானார் அவர்கள் எதிரே சென்று "உமரே, நீர் என்ன நோக்கத்தோடு இங்கு வந்தீர்?" என்று கேட்டார்கள்.

அவர்களுடைய வார்த்தையானது, உமரை நடுங்கச் செய்துவிட்டது.

உமர் மிகவும் பணிவோடு, "இஸ்லாத்தை ஒப்புக்கொள்வதற்காக" என்று கூறினார்.

உடனே பெருமானார் அவர்கள், "அல்லாஹு அக்பர்" (ஆண்டவன் மிக உயர்ந்தவன்) என உரக்கக் கூறினார்கள்.

அங்கே இருந்த அனைவரும் உடனே அவர்களோடு சேர்ந்து, "அல்லாஹூ அக்பர்" என முழங்கினார்கள்.

மக்காவில் இருந்த மலைகளில் எல்லாம் எதிரொலி கிளம்பின!

உமர் முஸ்லிம் ஆனதும், இஸ்லாமிய வரலாற்றில் ஒரு திருப்பம் உண்டாயிற்று.

அதுவரை முஸ்லிம்களின் எண்ணிக்கை, மிகக்குறைந்த அளவில் இருந்ததால், தங்கள் மத சம்பந்தமான காரியங்களைப் பகிரங்கமாக நடத்த இயலாமல் இருந்தது.