பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்



65. மதிப்பு யாருக்கு?

திருக்கிள்ளியே! உன் உடல் முழுதும், வாள் உழுது வடுப்பட்டுள்ளது. அதனால் நீ அழகு குறைந்தவன். “கண்ணுக்கு இனியன் அல்லன். ஆனால் காதிற்கு இனியன். ஆனால் உன் புகழ் பெரிது. ஏனெனில் உன் பகைவரோ, உன்னைக் கண்டால் அஞ்சிப் புறங்காட்டி ஒடுவர். ஆதலால் உடலில் புண் இல்லை. கண்ணுக்கு இனிய காட்சியளிப்பான். ஆனால் அவர்கள் செவிக்கு இன்னாதவர். நீயும் ஒன்றிலே இனியன். அவர்களும் ஒன்றிலே இனியர். ஆயினும் உன்னை மட்டும் தானே உலகம் மதிக்கிறது.


66. பிட்டங் கொற்றணின் பெரும் புகழ்!

பிட்டங் கொற்றன் சேரனின் படைத் தலைவன். குதிரை மலைத் தலைவன். அவன் நாட்டில் பன்றி உழுத நிலத்தில் தினை விதைப்பர். முற்றிய கதிரை அறுத்து அடித்துத் தினையைக் குற்றுவர். மான் கறி வாசனை வீசும் பானையைக் கழுவாமல் காட்டுப் பசுவின் பாலை ஊற்றுவர். தினை அரிசியைப் போட்டுச் சந்தன விறகால் எரித்து சோறு ஆக்குவர். வடித்து எடுத்து வாழை இலையில் போட்டுக் கூடி இருந்து உண்பர்.

இத்தகைய வளம் உடைய நாட்டு மன்னனான பிட்டன் கூரிய வேலன். வேங்கை மாலையன். வேகமாகச் செல்லும் குதிரையை உடையவன். பெருங்கொடை வள்ளல். ஆனால் பரிசிலர் நாவைத் துன்புறுத்தியவன் ஆவன். ஏனெனில் புலவர் அவனைப் பாடாமல் இருக்க முடியாது.