பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

அரசன் அவளை நெருங்கி வருமுன், “அரசே! என் கணவர் வியாபாரம் செய்ய அடுத்த ஊருக்குச் சென்றுள்ளார். யாரும் இல்லாத அநாதையாக இப்போது நான் இருக்கிறேன். குடிமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய தாங்கள் தகாத முறையில் நடந்து கொள்ளும் எண்ணத்தைக் கை விடுங்கள்.” என்று கெஞ்சி, அவனைக் கையெடுத்து வணங்கினாள்.

அவளுடைய வேண்டுதல் எதுவும், அரசன் காதில் ஏறவில்லை. அவன் தன் எண்ணத்தைக் கைவிடவில்லை என்பதை அறிந்தாள்.

“வேறு ஒருவன் மனைவியை தாங்கள் இச்சிப்பது பெரும் அநீதி, நீங்கள் பலாத்காரமாக என்னைக் கெடுக்க முயன்றீர்கள் ஆனால், அந்தப் பாவம் உங்களை விடாது. நான் அவமானப்பட்டு உயிர் வாழ விரும்பாமல், என் உயிரை மாய்த்துக் கொள்வேன்” என்று படபடப்போடு எச்சரித்தாள்.

அவள் என்ன சொல்லியும் அரசனுடைய எண்ணம் மாறாமல், அவளைப் பலாத்காரம் செய்ய முற்பட்டான்.

அப்போது, அருகில் கிடந்த உருளைக் கட்டையை எடுத்து தன் நெஞ்சில் பலமுறை குத்திக் கொண்டு, அதிர்ச்சியால் மனம் உடைந்து இறந்து போனாள்.

அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அரசன், வெட்கமும் பீதியும் அடைந்து விரைவாக அரண்மனையை நோக்கிச் சென்றான்.

அந்த அழகிக்கு தன்னால் ஏற்பட்ட மரணத்தை நினைத்தான்; மனச்சாட்சி அவனை உறுத்தியது. அன்று இரவே அரசனின் உயிர் போய்விட்டது.

மனச்சாட்சி மிகவும் உறுத்தும் என்பது இக்கதையின் கருத்து