பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை அருளிச் செயல்கள் 223



இப்பனுவலுக்கு 'சிவனுடைய துலகுக்குமத்தை வியந்தது’ என்று முன்னுள்ளோர் கருத்துரை வரைந்துள்ளனர். ஆனால் பதிகக் கருத்தும் பதிகப் பெயரும் முன்னயை போல ஒரு நோக்குடையன அல்ல. இறைவன் செய்தருளும் தொழில்களில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் என்னும் நான்கினைப் பற்றிப் பொதுவாகவும் விரிவாகவும் தெரிந்து கொள்ளுதற்கேற்ற அரும் பொருள்கள் இதன்கண் விரித்துரைக்கப் பெற்றுள்ளன. இப் பொருளைமைதியைத் திருவாசக உண்மையும் குறிப்பிடும்.

அளக்கலாகாப் பேரளவினவாகிய அண்டங்களெல்லாம் இறைவனது அருள் வெளிப் பரப்பினுள்ளே சிறிய அணுக்களையொப்ப அடங்கித் தோன்றுகின்றன. ஆகவே அவரது பெருமை, சொல்லுக்கும் மனத்திற்கும் எட்டா இயல்பினது. அண்டங்களின் தலைவராக நியமிக்கப்பெற்ற தெய்வங் களாகிய நுண்ணிய உயிர்களாலும் அறிய வொண்ணா நிலையினன், உயிர்க்குயிராய் உள் நின்று இயக்குவோனும் அவனே. ஆகவே அப்பெருமான் நுண்ணியவற்று ளெல்லாம் மிக நுண்ணியன் ஆகின்றான். உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாச் சிறப்பினவாய் அண்டப் பரப்பில் திகழும் ஞாயிறு, திங்கள், வான், வளி, தீ, நீர், மண் முதலிய எல்லாப் பொருள்களுக்கும் ஆற்றலை வழங்கி அவற்றைத் தொழிற் படுத்துவோன் முதல்வனே. பேரருளாளனாகிய அப் பெரியோன் அன்புடைய அடியார்களுக்கு அணுகி நின்றருளும் எளிமைத்திறமுடையவன். அன்பரல்லாதாருக்கு மிகமிகச் சேய்மையனாக அப்பாற்பட்டு நிற்கும் அருமைத் தன்மை யுடையவன். இறைவன் மாதொருபாகனாக எளிவந்து தோன்றி வழங்கிய பேரின்பம் உடம்போடிருந்து பொறுத்தற்கு இயலாதபடி உள்ளம் முழுவதையும் அகத்திட்டுக் கொண்டது என அடிகள் தாம் பெற்ற அருளாரமுதப் பேரின்ப நுகர்ச்சியை இத திருவகவலில் விரித்துக் கூறி யுள்ளார்.