பக்கம்:மாபாரதம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

மாபாரதம்


கன்னன் அதோடு அமையவில்லை. அர்ச்சுனனை வில்லேந்திக் களம் நோக்கி வரும்படி அழைத்தான். நேருக்கு நேர் நின்று போர் செய்ய விழைந்தான். அதுகண்டு துரியன் செருக்குக் கொண்டான். அன்பு மிகுதியில் உள்ளம் உருகினான்.

“போர் செய்தற்கு நீயோ எனக்கு நிகர்?” என அருச்சுனன் சினந்து கூறினான். உடனே கன்னன் “துரியனுக்கு எதிராக முனையும் போரில் உன் தலையைக் கொய்து அரங்க பூசை செய்வேன்” என்று ஆர்ப்பரித்தான்.

இடிபோல அருச்சுனனை எதிர்த்துக் கன்னன் முழக்கம் செய்ய அங்கிருந்த அனைவரும் திகைப்புற்றனர்; அறிவில் முதிர்ந்த ஆசான் ஆகிய கிருபன் இடை மறித்து அமுதத்துளி போன்று ஒரு வினாவை எழுப்பினான்.

“தேர் ஒட்டியின் மகன் பார் ஆளும் மைந்தனோடு சரி நிகர் சமானமாகப் போருக்கு நிற்றல் சாத்திரம் அனு மதிக்காது; சாதி பேதங்களை மதிக்காது நடந்துகொள்வது தகாது” என்று சாதியின் நீதி அறிந்தவன் கூறினான்.

அதனை மறுத்த துரியோதனன், “கற்றவர்க்கு, அழகு மிக்க கன்னியர்க்கு, வள்ளல்களுக்கு, வீரர் க்கு, வெற்றி மிக்க அரசர்களுக்கு, ஞானிகளுக்கு சாதிகள் இல்லை என் பதை அறியாமல் பேசுவது வியப்பாக இருக்கிறது” என்று அவன் கற்ற சாத்திரத்தை எடுத்துக் கழறினான்.

“தேரோட்டி மகன் என்று இகழ்ந்ததற்கு வருந்துகிறேன். இன்று முதல் பார் ஆளும் மன்னன் அவன்; அங்க தேசத்திற்கு அதிபதி ஆக்கி விட்டேன்” என்று முழக்கம் செய்தான். கன்னன் களிப்புக் கொண்டான்; நட்பு இறுகியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/51&oldid=1048295" இலிருந்து மீள்விக்கப்பட்டது