பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

மாயா விநோதப் பரதேசி

சம்பாஷித்த சொற்களின் நினைவும் தோன்றித் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. ஸ்திரிபுருஷர் மணந்து இல்லறம் நடத்தும் புதிய அனுபவம் எப்படி இருக்கும் என்பதை அறியாத யெளவனப் பருவத்துச் சிறுவர் சிறுமியர், உலகத்தினர் புருஷர் பெண்ஜாதியாக இருந்து வாழ்வதைக் கண்டு, இன்னதென்று விவரிக்க முடியாத ஒருவித பிரமைகொண்டு, தாமும் மற்றவரைப் போல மணம் புரிந்து கொண்டு இன்பம் அனுபவிக்க வேண்டும் என்ற ஒரு பெருத்த ஆவலை மனதிற்குள் பெருக்கிக் கொண்டிருப்பது பெரும்பாலும் இயற்கை ஆகையால், அதற்கு விலக்காகாத நமது கந்தசாமியினது மனம் தாமரை இலையின் மேல் உள்ள நீர்த்துளி போலத் தத்தளித்துக் கொண்டிருந்தது. மனோன்மணியம்மாள் இயற்கையில் நற்குணமும் கூர்மையான புத்தியும், அழகும் உடையவளாக இருந்தாள் ஆனாலும், இங்கிலீஷ் கற்க வேண்டும் என்ற ஆசையினாலும், அதனால் ஏற்பட்ட மூளை உழைப்பினாலும் பலவீனம் அடைந்து, நடை நொடி பாவனைகளிலும் வெள்ளைக்காரரைப் பின்பற்றி இந்தியர்களின் மனப்போக்குக்கு மாறான செய்கைகளையும் கொள்கைகளையும் கூசாமல் வெளிப்படுத்தியதைக் கண்டும், இந்திய ஸ்திரீகள் இழுக்கென்று மதிக்கும் பற்பல குற்றம் குறைபாடுகள் அவளிடம் இருக்கின்றன என்பதை நேருக்கு நேர் உணர்ந்தும், கந்தசாமி அவளது விஷயத்தில் ஒருவிதமான மன இளக்கமும் தயாளமான அபிப்பிராயமும் கொள்ளத் தொடங்கி, அடியில் வருமாறு தனக்குள் எண்ணமிட லானான். "ஆகா! இந்த இங்கிலீஷ் படிப்பு நம்முடைய தேசத்தில் எப்படிப்பட்ட அநர்த்தத்தை விளைவித்துவிட்டது! அடாடா! இந்தப் படிப்பு நம்முடைய ஆண் பிள்ளைகளை எல்லாம் கெடுத்ததோடு நிற்காமல் பெண்மக்களையும் சீர்குலைக்க ஆரம்பித்து விட்டதே! நம்முடைய பெண்பிள்ளைகள் கற்றுக் கொள்வதற்கு இங்கிலீஷ் பாஷையில் துன்மார்க்கங்களையும் துர் ஆசாரங்களையும் தவிர வேறு என்ன இருக்கிறது! ஆண் பிள்ளைகள் வயிற்றுப் பிழைப்புக்காக அந்தப் பாஷையைக் கட்டிக் கொண்டு அழும்படி கடவுள் விதித்து விட்டார். அந்த பாஷை நம்மை ஆளும் இராஜாங்கத்தாருடைய பாஷை ஆகையால், அதைக் கற்பவருக்குப் பெரிய பெரிய உத்தியோகங்