பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

59

நிறைந்து இன்பவடிவமாய் இருக்கும் நமது ஸ்திரீகளை நாம் வெளியுலகில் விடுத்து, அவர்கள் லஜ்ஜையின்றி ஆண்பாலாரோடு பழகித் துணிகரம் துடுக்கு முதலிய குணங்களில் தேறி, முற்றிலும் ஆண் தன்மை அடையும்படி செய்வது, நாமே நமது வீட்டில் கொள்ளி வைத்துக் கொள்வது போல முடியுமே அன்றி வேறல்ல. இந்தப் பட்டாபிராம பிள்ளைக்கு வேறே ஆண் சங்கதியாவது பெண் சங்கதியாவது கிடையாது. இவருக்கு லட்சக்கணக்கில் சொத்து இருக்கிறது. அவ்வளவு சொத்தும் இந்த மனோன்மணிக்கே கிடைக்கப் போகிறது. இவள் உத்தியோகம் பார்த்து மேன்மேலும் பொருள் தேட வேண்டிய அவசியமே இல்லை. அப்படி இருக்க எதற்காக இவளுடைய தகப்பனார் இவளை பி.ஏ. வகுப்பு வரையில் படிக்க வைத்திருக்கிறார் என்பது தெரியவில்லை. ஸ்திரீகள் படிப்பதற்கு நம்முடைய தேசபாஷைகளில் அருமையான நூல்கள் இல்லை என்று நினைத்து இந்த இங்கிலீஷ் பாஷையைக் கற்க விடுத்தாரா? இவள் உத்தியோகம் வகிக்கா விட்டாலும் மேலான அறிவும் பாஷாஞானமும் அடைய வேண்டும் என்றால், அதற்கு, தமிழ் சமஸ்கிருதம் முதலிய நம்முடைய தேசத்துத் தாய் பாஷைகள் இல்லையா? அவைகளில் காணப்படும் அழகும், அற்புதங்களும் இங்கிலீஷ் பாஷையில் இருக்குமா? மனிதர் நற்குண, நல்லொழுக்கம், தெய்வபக்தி முதலிய ஆசார தர்மங்களைக் கற்பதற்கு நம்முடைய பாஷையில் உள்ள நூல்களைவிடச் சிறந்த நூல்கள் இந்த உலகில் வேறே எந்த பாஷையிலாவது இருக்குமா? இவள் இங்கிலீஷ் கற்று, நமது தேசத்தில் உள்ள ஸ்திரீ தர்மங்களுக்கு மாறாக நடந்து, சகல விதத்திலும் குதர்க்க புத்தியோடு ஒழுகினால், எந்தப் புருஷன் இவளை விரும்புவான்? இங்கிலீஷ் பாஷையால் ஏற்படும் மேலான அறிவு மனிதன் கட்டுப்பாட்டுக் கடங்காமல், அவனுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய்யலாம் என்ற துணிகரமான நினைவையே உண்டாக்குவதால், அந்த வழியில் நமது ஸ்திரீகளை நடத்துவது ஒருவன் தன்னைத் தானே கொலை செய்து கொள்ள எத்தனிப்பது போன்றதே அன்றி. வேறல்ல. இந்த மனோன்மணியம்மாளுக்கு இவ்வளவு அபாரமான