310
இருபத்தொன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்
நர்மதா சொன்ன போலீஸ்காரனைத்திருடன் பிடித்த கதை
"கேளாய், போஜனே! 'இட்லி நகர், சட்னி நகர்' என்று ஏதாவது ஒரு நகர் நிமிஷத்துக்கு நிமிஷம் உருவாகி வரும் இச் சென்னை மாநகரிலே 'இளிச்சவாயன் நகர், இளிச்ச வாயன் நகர்' என்று ஒரு நகர் உண்டு. அந்த நகரிலே 'பொன்னி, பொன்னி' என்று ஒரு கன்னி உண்டு. அழகென்றால் அழகு, கொள்ளை அழகாயிருந்த அந்தக் கன்னியை மணம் புரிய எத்தனையோ காளைகள் 'நான், நீ' என்று போட்டி போட்டுக் கொண்டு முன் வர, அத்தனை காளைகளையும் அவள் 'வேண்டாம், வேண்டாம்' என்று மறுத்து வர, 'யாரைத்தான் அம்மா, நீ கலியாணம் செய்து கொள்ளப் போகிறாய்?' என்று ஒரு நாள் அவளைக் கேட்டார் அவள் தகப்பனார். 'போங்கப்பா, நான் சொல்ல மாட்டேன்!' என்று அவள் தன் முகத்தை இரு கைகளாலும் பொத்திக் கொள்ள, அவர் அவளுடைய கைகளைச் சிரித்துக் கொண்டே விலக்கி, ‘சும்மா சொல்லம்மா?' என்று ஒரு தடவைக்கு நாலு தடவையாக வற்புறுத்த, ‘நான் ஒரு போலீஸ்காரரைக் கலியாணம் செய்துகொள்ளப் போகிறேன், அப்பா!' என்று சொல்லிவிட்டு அவள் வெட்கம் தாங்காமல் புழக்கடைக்கு ஓடுவாளாயினள்.