பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்


கலியாணம் செய்து வைக்க வேண்டாமா?' என்றாள் மரகதம்.

‘அவசியம் செய்து வைக்கவேண்டியதுதான்’ என்றான் மாணிக்கம்.

உடனே தன் கூண்டிலிருந்த கிளியை எடுத்து அவன் கூண்டிலிருந்த கிளியோடு அவள் விட, இரண்டும் ஒன்றோடு ஒன்று கூடி மகிழ்வதற்குப் பதிலாகக் ‘கீ, கீ’ என்று கத்திக் கொண்டே கொத்திக்கொண்டு சண்டையிட, ‘ஏன் சண்டையிடுகிறீர்கள்?’ என்று கேட்கலாயினள்.

‘எனக்கு இந்த ஆண் வர்க்கத்தைக் கண்டாலே பிடிக்காது!’ என்றது பெண் கிளி.

‘எனக்கு இந்த பெண் வர்க்கத்தைக் கண்டாலே பிடிக்காது!’ என்றது ஆண் கிளி.

‘ஏன்?' என்று கேட்டான் மாணிக்கம்.

‘சொல்கிறேன், கேளுங்கள்!’ என்று ஆண் கிளி சொன்ன கதையாவது:

பீதாம்பரம், பீதாம்பரம் என்று ஒரு விற்பனையாளன் உண்டு. பிரபல மருந்து கம்பெனி யொன்றில் வேலை பார்த்து வந்த அவன், அடிக்கடி வெளியூருக்குப் போவ துண்டு. தன் மனைவி பிரேமாவிடம் அவன் உயிரையே வைத்திருந்தான். அவள் கண்ணில் நீர் வடிந்தால் அவன் கண்ணில் ரத்தம் வடியும். வெளியூரில் இருக்கும்போதுகூட அவன் அவளை மறக்கமாட்டான். உள்ளுரில் கிடைக்காத ஏதாவது ஒன்று வெளியூரில் கிடைத்தால் போதும்; உடனே அதை வாங்கி அவளுக்கு அனுப்பி வைத்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பான். கடிதம் அநேகமாக ஒரு நாள்கூடத் தவறாமல் வரும். அந்தக் கடிதங்களில் வெறும் காதல் மொழிகள் மட்டும் இருக்காது; அன்பு முத்தங்களும் ஆசை முத்தங்களுமாக ஆயிரமாயிரம் முத்தங்கள் அடுக்கடுக்காக