இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3
கண்ணென்றால் காவியத்தை ஆக்கிக் காட்டும்
- காரிகையார் நடையுடையில் எழிலின் தேக்கம்,
மண்தின்றால் தீமைஎன அறியாப் பிள்ளை
- மழலைமொழிப் பார்வைகளில் எழிலின் ஒட்டம்,
விண்சென்று மீளுகின்ற பட்டம் விட்டு
- விளையாடும் சிறுசெருவில் எழிலின் பாய்ச்சல்,
தண்ணென்ற புனலோடைச் சலச லப்பில்
- தகுமெழிலின் பளபளப்பு விளங்கக் கண்டேன்
4
சுடர்விட்டுக் காட்டுகின்ற கதிரோன் தோன்றச்
- சுருக்கவிழ்ந்து சிரிக்குமுகத் தாம ரைக்குள்
கடன்பட்ட மாந்தரிடம் வட்டி கேட்கக்
- கடைதோறும் புகுந்துவரும் கணக்க னைப்போல்
இடம்விட்ட மலர்தோறும் சென்று தேனை
- இனிதுறிஞ்சி இசைபாடிச் செல்லும் தும்பி
அடைபட்டுக் கிடக்கவெனக் குவிந்து கொண்ட
- அல்லிமலர்க் கூட்டத்துள் அழகு கண்டேன்
5
விண்பரப்பில் மீன்நடுவே ஒளியைக் கான்று
- மென்னடையில் நிலவுப்பெண் ஊர்ந்து செல்ல,
மண்புரக்கும் வேலியென அமைந்த வேலை
- மடிந்துமடிந் தலைஎழுப்பிக் கரையில் மோத,
மண்பரப்பில் எழுப்பியுள வலைஞர் சிற்றில்
- மனைவியின்பால் விடைபெற்றுத் தோணி ஏறிக்
கண்மறைக்கும் நெடுந்தொலைவு கடலுள் ஏகிக்
- கடும்புயலும் சுறவினத்தின் வாயும் தப்பி,
29