3 இணைபிரியா அன்றில் திருமண முயற்சி மேலைச்சிவபுரிக்கு அருகிலுள்ள வலம்புரி என்னும் ஊரில் அழகிற் சிறந்த பெண் ஒருத்தியிருந்தாள். அப்பெண் வீட்டார் எங்கள் இல்லத்துக்கு அடிக்கடி வந்து செல்வர். நாங்களும் சென்று வருவோம். நன்கு அறிமுகமான குடும்பம். அப்பெண் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்பிய செய்தி எனக்குக் கிடைத்தது. என்அன்னையிடம் கேட்டு முடிவு சொல்கிறேன் எனக் கூறிவிட்டேன். பின் என் அன்னையிடம் கேட்க, ஒரேயடியாக மறுத்து விட்டார். புதுக்கோட்டையில் அறிவு வளர்ச்சிக் கழகம் நடத்தி வந்த இராம. கலியாண சுந்தரம் என்பாரிடம் கலப்பு மணம் செய்து கொள்ளப் பெண் வேண்டும் என்று கூறியிருந்தோம். கலப்பு மணந்தான் செய்து கொள்வேன்; இல்லையென்றால் திருமணமே வேண்டாமென்று உறுதியாகக் கூறிவிட்டமையால் என் பெற்றோரும் இசைந்து விட்டனர். நான் சென்னையில் ஆசிரியராகப் பணி புரிகின்ற பொழுது, இராம. கலியாணசுந்தரம், பெண் பார்த்திருப்பதாகவும் உடனே புறப்பட்டு வருமாறும் மடல் எழுதியிருந்தார். அன்றே பெண்ணுக்குத் தந்தையாரும், நேரே அவர் வீட்டிற்கு வருமாறு மடல் எழுதியிருந் தார். அவர் இரண்டு திரைப்படக் கொட்டகையின் உரிமையாளர் என்பதை அவர் மடல் வாயிலாக அறிந்து, செல்வராக இருப்பார் என எண்ணி, அவருக்கு மடல் எழுதினேன். என்னைப் பற்றித் தோழர் கலியாணசுந்தரம் உங்களிடம் கூறியிருப்பார் என எண்ணுகிறேன். என் குண நலன்களை மட்டும்