பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 293 தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கும் எனக்கும் ஏற்பட்டுள்ள இடையறாத தொடர்புக்குக் காரணம் மேற்கூறிய இனவுணர்வும் மொழியுணர்வுமே. அவரோ சமயத் தலைவர்; நானோ திராவிட இயக்கத்தவன். எனினும் என்பால் தலையளி காட்டுகிறார்; சோமசுந்தரப் பெருமான் சுந்தரமூர்த்தி நாயானாரிடம் எத்தகைய அன்புணர்வை-தோழமையுணர்வைக் காட்டினாரோ அத்தகைய உணர்வை என்னிடம் காட்டுகிறார். ஏன்? சோம சுந்தரப் பெருமாள் சுந்தரரிடம் வேண்டிய அந்தச் சொற்றமிழ் தான் காரணம் அடிகளார் என்பால் தண்ணளி கொண்டமைக்கு எடுத்துக் காட்டொன்று தருவது ஏற்புடைத்தாகும். பண்டிதமணி மு.கதிரே சனாரின் வாழ்க்கை வரலாற்றை ஊன்றுகோல் என்னுந் தலைப்பிற் காப்பியமாக எழுதியிருக்கிறேன். இக் காப்பியத்தில் ஒரிடத்தில், பண்டிதமணியார் அடிகளைக் காண வந்த செய்தியையும் பண்டித மணியார் கீழே அமர்ந்திருந்ததையும் அவரைக் காண அடிகள்தாமே மாடியிலிருந்து இறங்கி வந்த செய்தியையும் குறிப்பிட்டு விட்டுச் சிவபெருமான் தமிழுக்காகப் பனிமலை (இமயமலை)யிலிருந்து இறங்கி மதுரைக்கு வந்தார், அதுபோலச் சிவனடியாராகிய அடிகளாரும் தமிழை (பண்டிதமணியை)க் காண மேலிருந்து இறங்கி வந்தார் எனப் பாடியிருந்தேன். அதனைப் படித்துப் பார்த்த அடிகளார் இப்பொழுதும் அப்படித் தானே என்றார். முதலில் எனக்கொன்றும் விளங்க வில்லை. பின்னர் அவரே விளக்கினார். நீங்கள் வந்தாலும் மாடியிலிருந்து நான் தானே இறங்கி வருகிறேன்; உங்களை மாடிக்கு அழைப்பதில்லையே, தமிழுக்காக இன்னும் இறங்கி வருகிறேன்' என்று விளக்கினார். ஒரு நாள் குன்றக்குடி மடத்திற்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த பணியாளர் வழக்கத்திற்கு மாறாக என்னை மாடிக்கு அழைத்துச் சென்று விட்டார். அடிகளார் என்னைக் கண்டதும் பதறிப் போய்ப் பணியாளரைக் கடிந்து கொண்டார். அதன் பின், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று என்னிடம் கூறினார் என்றால் அந்தத் தமிழுள் ளத்தை என்னென்பது! அத்தமிழ் நெஞ்சத்திற்கு நான் அடிமை யாகாமல் இருக்க இயலுமா? ஒருமுறை, பறம்புமலையில் நிகழ்ந்த கவியரங்கிற் கலந்து கொண்டு, அவர் வண்டியிலேயே வந்தோம். வரும்பொழுது,