பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசாட்சி

37

சோழன்' என்று வழங்குவாராயினர். 'தவிராத சுங்கந்தவிர்த்தோன்'[1] என்று புலவர் பெருமக்களும் இவனைப்புகழ்ந்து பாராட்டினர். தஞ்சாவூரைச் சார்ந்த கருந்திட்டைக்குடி இவனது ஆட்சிக்காலத்தில் சுங்கந் தவிர்த்த சோழனல்லூர் என்ற பெயரும் எய்திற்று. பின்னர், சோழமண்டலம் முழுவதையும் அளந்து நிலங்களின் பரப்பை உள்ளவாறு அறிந்தாலன்றி நிலவரியை ஒழுங்குபடுத்தல் இயலாது என்று கருதி, அதனை முற்றிலும் அளக்குமாறு ஆணையிட்டான். அவ்வேலையும் இவன் பட்டமெய்திய பதினாறாம் ஆண்டாகிய கி. பி. 1086-ல் தொடங்கப்பெற்று, இரண்டு ஆண்டுகளில் முடிவுற்றது.[2] பிறகு, இவன், குடிகள் எல்லோரும் ஆறிலொரு கடமை நிலவரி செலுத்திவருமாறு ஏற்பாடு செய்தான். இங்ஙனமே இவனது பாட்டனுக்குத் தந்தையாகிய முதலாம் இராசராசசோழன் காலத்தும் சோழமண்டலம் ஒருமுறை அளக்கப்பெற்றதோடு ஆறிலொருகடமை வரியும் விதிக்கப்பெற்றது. குலோத்துங்கனது ஆளுகையில் வரி விதிக்கப்படாமல் ஒதுக்கப்பெற்ற நிலங்களும் உள. அவை, ஊர்நத்தம், குளம், கம்மாளச்சேரி, வெள்ளான் சுடுகாடு, பறைச்சுடுகாடு, ஊர்நிலத்தூடறுத்துப்போன வாய்க்கால், சீகோயில், ஐயன்கோயில், பிடாரிகோயில், கழனிக்குளங்கள், பறைச்சேரிநத்தம், நந்தவனம், குடியிருக்கை, ஊரிருக்கை, ஓடை, ஈழச்சேரி, வண்ணாரச்சேரி, பெருவழி, திருமுற்றம், ஊருணி, கொட்டகாரம், களம், தேவர்


  1. 3. குலோத்துங்க சோழனுலா - வரி 52.
  2. The Historical Sketches of Ancient Dekhan page (358)