பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போர்ச்செயல்கள்

45

குலோத்துங்கன் மேலைச்சளுக்கியரோடு நடத்திய இரண்டாம் போரும் இவ்வாறு வெற்றியுடன் முடிவுற்றது.

4. பாண்டியருடன் நடத்திய போர்:- குலோத்துங்கன் நடத்தியதாக அறியப்படும் இந்தப் பாண்டியப் போரும் இவனது ஆட்சியின் பதினொன்றாம் ஆண்டாகிய கி. பி. 1081-ன் தொடக்கத்தில் நடைபெற்றது. வடக்கேயுள்ள நுளம்பபாடிப் பாண்டியனோடு கி. பி. 1076-ல் இவ்வேந்தன் புரிந்த போரும் தெற்கேயுள்ள செந்தமிழ்ப்பாண்டி நாட்டின் அரசர்களுடன், கி. பி. 1081-ல் இவன் நிகழ்த்திய இப்போரும் வெல்வேறு போர்களாம்.

முதலாம் பராந்தக சோழன், முதலாம் இராசராச சோழன் ஆகிய இரு வேந்தர்களின் காலங்களில், பாண்டியர் தம் நிலைகுலைந்து சோழர்களுக்குத் திறைசெலுத்தும் சிற்றரசர் ஆயினர். ஆனால் அவர்கள் சிறிது படை வலிமை எய்தியவுடன் அடிக்கடி சோழர்களுடன் முரண்பட்டுத் தாம் முடிமன்னராதற்கு முயன்றுவந்தனர். அவர்கள், அங்ஙனம் முரண்பட நேர்ந்தமையின் சோழ மன்னர்களுள் ஒவ்வொருவரும் தம் தம் ஆட்சிக்காலங்களில் பாண்டி நாட்டின் மீது படையெடுத்துச் செல்லல் இன்றியமையாததாயிற்று. இதனால் நேரும் துன்பங்களையுணர்ந்த கங்கைகொண்ட சோழன் எனப்படும் முதலாம் இராசேந்திரசோழன் பாண்டியரை அரியணையினின்று இறக்கித் தன் மக்களுள் ஒருவனுக்குச் சோழபாண்டியன் என்னும் பட்டம் அளித்துப் பாண்டிநாட்டின் தலைநகராகிய மதுரையில் அரசப்பிரதிநிதியாயிருந்து அந்நாட்டை யாண்டுவருமாறு ஏற்பாடு செய்தான். அங்ஙனமே அவன் மக்களுள் இருவரும் பேரன்