பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



8

முதுமைக் காலத் தொல்லை, பூச்சிகளினால் ஏற்படும்


அதனால் தான் பாம்புகளைப் பற்றியும், அவை கடித்தால் என்ன சிசிக்சைகளைச் செய்யலாம் என்பது குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் கிராமப்புறங்களிலே வாழும் மக்களுக்குக் கூற வேண்டியது அவசியமாகிறது.

பாம்புகளில் விஷமில்லாத பாம்புகள்தான் அதிகம் இருக்கின்றன. விஷம் இருக்கும் பாம்புகள்தான் பதுங்கி, மறைந்து, மக்களது கண்களுக்குத் தெரியாமல் வாழும் சுபாவமுடையனவாய் இருக்கின்றன.

தண்ணீர்ப் பாம்புக்கு விஷம் இல்லை! அது வயற் புறங்களிலே, வரப்புகளிலே, கிணறு, குளம், குட்டைகளிலே தாராளமாய் வாழ்ந்துக் கொண்டிருக்கும்.

நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரைந்துருகும், அஞ்சாப் புறங்கிடக்கும், நீர்ப் பாம்பு என்று ஒளவைப் பாட்டி நமக்கு, பாம்புகளின் சுபாவங்களைப் பாடி புத்திமதி கூறியிருக்கிறார்.

எனவே, நீர்ப் பாம்புகளைப் பற்றி கிராமப்புற மக்கள் கவலைப்படமாட்டார்கள். அவற்றைப் பார்த்தால்கூட ஐயோ பாவம் என்று அடிக்கவும் மாட்டார்கள்.

ஒருவேளை தண்ணீர்ப் பாம்பு கடித்துவிட்டாலும் கூட, கடித்த இடத்திலே சுண்ணாம்பைத் தடவிவிட்டு அவரவர் வேலைகளைப் பார்ப்பார்கள்.

நல்ல பாம்பு என்றொரு பாம்பு உண்டு அதற்குக் கொடிய விஷம் உண்டு. அது கடித்தால் மனிதனுக்குச் சாவு ஏற்படும் என்பது உறுதி என்று மக்கள் பயப்படுவார்கள் அது உண்மையும் கூட!

பெயருக்கு ஏற்றபடி அந்தப்பாம்பு கெட்ட பாம்பு அல்ல.

நல்ல பாம்புதான். அந்தப் பாம்பினிடம் நாம் துஷ்டத்தனமோ, குறும்புகளோ செய்யாத வரை அது நல்ல பாம்புதான்.