உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்

53


என்ன?’ என்ற தலைப்பில் நான் அன்றைய சோவியத் வெளியீடுகளை அடிப்படையாகக் கொண்டு சில வாரங்களாக எழுதி வந்த கட்டுரைத் தொடரும் இதே போன்ற நோக்கிலேயே இருந்தது.

சீனாவிலும் கூட, ஜாதனோவ் மேற்கொண்டிருந்த இதே கருத்து நிலைதான் நீடித்திருந்தது. இதற்கு அந்தக் காலத்தில் நமக்குக் கிட்டி வந்த சீன இலக்கியம் (Chinese Literature) என்ற மாத சஞ்சிகையே நல்ல சாட்சியாகும். அங்கும் இலக்கியத்தில் கட்சி உணர்வு (Party Spirit in Literature) என்ற கொள்கை வலியுறுத்தப்பட்டது. சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சியின் 20வது காங்கிரசுக்குப் பின்னால் 1957இல் மா.சே.துங் “நூறு மலர்கள் பூக்கட்டும்!” என்ற கோஷத்தை இலக்கியத் துறைக்காக வழங்கிய போதிலும், அந்த நூறு மலர்களும் செம்மலர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதே அவரது கருத்தாக இருந்தது. இது ஹங்கேரி நிகழ்ச்சிக்குப் பின்னால், சீன நாட்டிலும் எழுத்தாளர்கள் ஓரளவுக்குக் கருத்துச் சுதந்திரம் பெற முற்பட்ட காலத்தில் மிக நன்றாகத் தெளிவுபடுத்தப்பட்டது. அவர்களைக் கண்டித்து ஷாவோ சுவான்லின் என்பவர் எழுதிய “இலக்கியத்தில் இருவேறு போக்குகளுக்கிடையிலான போராட்டம்” (The Struggle between two trends in literature) என்ற கட்டுரையில், “எழுத்தாளர் சங்கமானது பலவகையான பூக்களும் பூப்பதை ஊக்குவிக்கும் விஷயத்தில், எழுதுவதில் ஒரு பொதுவான சோஷலிசக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு பாணிகளையும் கருத்துப் போக்குகளையும் வளர்ப்பதையே ஆதரிக்கிறது. கருத்துப் போக்குகளுக்கும் கோஷ்டிகளுக்கும் இடையிலான வேற்றுமை என்னவென்றால், கருத்துப் போக்குகளைச் சேர்ந்தவர்கள் ஒரே இலக்கியப் போக்கையும் ஒரு பொதுவான சிந்தாந்த அடிப்படையையும் பகிர்ந்து கொள்பவர்களாவர்” என்றே எழுதினார். அதாவது கட்சியின் நிலையை ஏற்றுக் கொள்ளாத அல்லது அதிலிருந்து மாறுபட்ட எழுத்தாளர்களை அவர் ‘கோஷ்டிகள்’ என்றே