பக்கம்:முல்லைக்காடு, பாரதிதாசன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்த்தாய் பூசை போதுமா? சாற்றுக!
“தமிழர் பொருளெலாம் தமிழுக்குத் தந்தார்”
“தமிழை யுயர்த்தினர் தாமுயர் வுற்றார்”
என்றசொல் நாட்டினால், இறவா நற்புகழ்
நன்று வாய்ந்திடும் என்ற நடுக்கமோ?
தமிழின் தொண்டு தரித்திர வயிற்றுக்கு—
அமிழ்தம் அன்றோ அண்ணன்மாரே!

000


ஆவன தமிழுக் காற்றுதல் சிறிதே.
ஈவது சிறிதே இன்ப மொழிக்கு!
வருத்தச் சேதி இஃதொன்று மட்டுமா?
ஒருவர் ஒன்று தமிழ்கலம் உன்னி
இயற்ற முன் வந்திடில், இடையூறு பற்பல
இயற்ற முன்வருவதை என்ன என்பது!


சேர்ந்து தொண்டாற்றுதல் சிறப்பா? அன்றிக்
காய்ந்தும், முணுத்துக் கசந்தும் கலகம்
செய்தும் திரிதல் சிறப்பா? செப்புக!
குள்ள நெஞ்சினர் கொடுமை செய்வதைத்
தெள்ளிய நெஞ்சினர் தீர்த்தும், தமிழில்
அன்பிலாத் தமிழரை அன்பில் தோய்த்தும்,
தென்பா லெழுந்த தீந்தமிழ்ச் சுடரை
வானிடை எழுமோர் வண்மைச் சுடராய்ச்
செய்யமுன் வருக தமிழரே,
உய்ய நம்மவர்க்கிங் குறுதுணை அஃதே!

 

18