பக்கம்:முல்லைக்காடு, பாரதிதாசன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தகுந்த குடும்பம் சர்வ கலாசாலை

காலை விழித்தெழுந்தாள் கைம்மலரால் கண்துடைத்தாள்!
கோல மலர்கமழும் கூந்தல் திருத்தினாள்.
காந்தி முகம்கழுவிக் கைவிளக்கை ஏற்றி,மிகு
சாந்த உரைபேசிப் பிள்ளைகளைத் தானெழுப்பி,
வீணை எடுத்தாள்! விளைத்தாள் அமுதத்தை!
ஆணழகன் தன்நாதன் அவ்வமுதம் கேட்டெழுந்தான்!
காதற் கணவன், கனியன்புப் பிள்ளைகள்
சோதித் தமிழ்க்கவிதை சுருதியொடு கலக்கப்
பாடினார்! பாடிப் பனிக்காலைப் போதுக்குச்
சூடிஅழைக்கச், சுடரும் கிழக்கினிலே
செம்மை ஒளியிற் சிரித்துத் தலைநிமிர்ந்தான்!
அம்மை குடித்தனத்தை ஆளும் அரசியிவள்
பிள்ளைகளைக் கூட்டிப்போய்ப் பீடத்தி லேயமைத்துப்
பள்ளிக்கு வேண்டியநற் பாடங்கள் சொல்லிவிட்டு,
நல்ல கதையுரைத்து ஞாலப் பதுமைகளைச்
சொல்லி மகிழ்வித்தாள். தோயன்பு நாதன்முதல்
எல்லாரும் இன்ப உணவுண்டார். மக்களெலாம்
கல்விச்சாலை செல்லக் கட்டும் உடைப்பொத்தலெல்லாம்
இல்லக் கிழத்தி எழில் தையற் காரியாய்த்
தைத்துடுத்தி விட்டாள்; தனது கணவனிடம்
அத்தினத்தில் ஆனபல ஆலோசனை பேசி

 

22