பக்கம்:முல்லைக்காடு, பாரதிதாசன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாதன் வெளிச்செல்ல நங்கை இனிதிருந்த
போதில், வெளியூர்ப் புறத்தி லிருந்து தன்
வீட்டுக்கு வந்த விருந்தாளி, வீதியிலே
போட்டிருந்த கல்தடுக்கப் பொத்தென்று வீழ்ந்ததனால்
மண்டை யுடைந்துவந்தான்; வஞ்சி இரக்கத்தால்
அண்டையிலே கட்டில் அதில்வளர்த்தி நற்சிகிச்சை
தக்கபடி புரிந்தாள். தன்நாதன் வீடுவந்தான்.
ஒக்க இருந்தான். உடலும் நலமாச்சு.
நல்ல சுகாதாரம் நாடிச் சமைத்திருந்த
பல்லுணவும் இட்டாள். பகல் கணக்கும் தான்எழுதிச்
சித்திரத்தில் மக்கள் திருந்தப் படமெழுதி
வைத்திருந்த நூலை மணவாள னோடிருந்து
வாசித்தாள். நல்ல வடிவழகன் பேச்சமுதை
ஆசித்தாள், இன்பம் அடைந்தாள். சிறிதயர்ந்தாள்.
பக்கத்து வீட்டுப் பருவதத்தாள் தான்வந்து
சொக்கர் திருவிழாச் சோபிதத்தைச் சொல்லி,
வருவாய் நாம்போய் வருவோம்; மாலைதிரும்பி
வருவோம் என்றாள்! இந்த வார்த்தைகளைக் கேட்ட
இல்லக் கிழத்தியவள் சும்மா இருந்துவிட்டாள்.
நல்ல விழாவைத் தன்நாவால் மறுப்பாளா?
வந்த விருந்தாளி பருவதததின் வார்த்தைக்குத்
தந்தபதில் இதுவாம்:— “தையலரே கேளுங்கள்!
சங்கீதக் கோகிலத்தைத்— தாவும் கிளையினின்று
அங்கு விழாவுக் கழைத்தால் வருவதுண்டோ?

 

23