பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 மூன்றாம் குலோத்துங்க சோழன் இவ் வாதித்தன் மகன், பரகேசரி பராந்தகன் என்பான். இவன், தன் பேராற்றலால் பாண்டிய நாட்டையும் ஈழநாட்டையும் வென்று அடிப்படுத்திச் சோழர் பெருமையை ஓங்கச் செய்தான் ; சிவபக்தியிற் சிறந்தவனாய்த் திருச்சிற்றம்பலத்தின் முகட்டைப் பொன் வேய்ந்து புகழ்பெற்றான். இவ்வாறு இப்பராந்தகனால் முயன்று நிலைநாட்டப்பெற்ற சோழராஜ்யத்தை, இவன் மக்களும் பேரர்களும் முன்னிலைமை குறையாதபடி பேணிப் பாதுகாத்து வந்தனர். இவர்களுள், பராந்த கனது கொட்பேரனான இராஜகேசரி முதலாம் இராஜ ராஜன் என்பவன், சிறுவிளக்கில் ஏற்றிய பெரும் பந்தம் போல விளங்கினான். இவனே, பாண்டிய சேர ஈழ நாடுகள் முழுமையும் வென்று, அவற்றைச் சோணாட்டின் பிரிவுகளாக்கிச் சோழசாம்ராஜ்யத்தை அமைத்தவன். இவன் சிவபக்தி மிக்கவன் ; திருவாபரணம் முதலியவை களைப் பெருவாரியாகக் கோயில்களுக்கு வழங்கினவன். தஞ்சைமாநகர், இவன்காலத்தில் அரசிருப்பாகப் பொலிவுபெற்று விளங்கியது. அந் நகரில் இவன் எடுப் பித்த இராஜராஜேசுவரம் என்னும் பிருகதீசுரர் (பெருவுடையார்) கோயிலொன்றே இவன் பெருமையை இன்றுவரை உலகில் விளக்கி நிற்கின்றது. திருவிசைப் பாவில் கருவூர்த்தேவர் என்ற சிவனடியாரால் இப்பெரிய கோயில் பாடிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் என்னும் மூவரின் வணக்கம், இவன் காலத்திலிருந்தே நாட்டில் பரவிய தாகும். இவ்வடி யார்கள் அருளிச்செய்த தேவாரத்தைக் கண்டுபிடித்து, நம்பியாண்டார் நம்பிகளைக்கொண்டு வெளிப்படுத்தியும், அதனால் திருமுறை கண்ட சீராஜராஜன்' எனப்பெயர் பெற்றும் விளங்கிய வேந்தன் இவனே என்பர். இவ னுக்குச் சிவபாதசேகரன், அருண்மொழித்தேவன்,