பக்கம்:மேனகா 1.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிச்சையெடுத்தது பெருமாள்; பிடுங்கித்தின்றது அனுமார்.

177


வராக:- (ஆத்திரத்தோடு) அக்காள் ஏன் என்னை வீணாய்க் கொல்லுகிறாய்? எனக்கு இப்போது சாதம் வேண்டாம்; சாப்பிடாததனால் நான் செத்துப்போயிட மாட்டேன். பேசாமலிரு - என்றான்.

அவள் ஓயாமற் சொன்ன உபசார வார்த்தைகள் அவனுக்குப் பெருந்தொல்லையாய் இருந்தன. மேனகாவும் தானும் நிகரற்ற இன்பம் அநுபவித்திருந்த சயனத்தில் இருந்ததும் நரக வேதனையாய்த் தோன்றியது. அந்த இடத்தைவிட்டு எங்கேயாயினும் போனால் தன் மனத்தின் குழப்பமும் கொதிப்பும் வேதனையும் தணிவடையலாம் என்று நினைத்து எழுந்து கூடத்திற்கு வந்து, “நான் ஹோட்டலில் காப்பி சாப்பிட்டு விட்டு வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டே வெளியிற் போய்விட்டான்.

பெரு:- (கோமளத்தை நோக்கி) இன்றைக்கு இப்படித்தான் இருக்கும்; எல்லாம் இன்னம் நாலைந்து நாளில் சரியாய்ப் போகிறது. பழைய பெண்டாட்டி போனால் புதுப் பெண்டாட்டி வரப் போகிறாள். விசனமென்ன? புதியவளால் பெரிய ஆஸ்தி கிடைக்கப் போகிறது. நாளைக்கே வீடு வாங்கப் போகிறோம். அந்த நன்மை யெல்லாம் இவனுக்கு இப்போது தெரியாது; பின்னால் சுகப்படும் போது மேனகா போனது நல்லது என்பது விளங்கும்.

கோமளம்:- அப்போது நிஜத்தை நாம் இவனிடம் சொன்னாற் கூட, இவன் கோபித்துக் கொள்ள மாட்டான்.

பெரு:- சேச்சே! நிஜத்தை நாம் ஒருநாளும் இவனிடம் வெளியிடக் கூடாது. குடி கெட்டுப்போம்; இவன் இப்போது முன்மாதிரி இருக்க வில்லை. சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை யல்லவா! நாம் ஏதோ ஒரு பெருத்த நன்மையை உத்தேசித்து அவளை விற்றுவிட்டோம். இனிமேலும் இவனிடம் அயோக்கியத் தனமாய் நடந்து கொண்டால் நம்மை ஓட்டி விடுவான்; சந்தேகத்திற்கு இடமில்லாமல் நாம் ஒழுங்காக நடந்து வரவேண்டும்- என்றாள்.

மே.கா.I–13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/195&oldid=1250985" இலிருந்து மீள்விக்கப்பட்டது