320
மேனகா
தயவு செய்து என்னை வற்புறுத்த வேண்டாம். - என்று நயந்து வேண்டினாள்.
அதைக் கேட்ட அலிமா புண்பட்ட மனதோடிருக்கும் தனது சகோதரியை மேலும் வருத்த மனமற்றவளாய், “அப்படி யானால் இன்னம் கொஞ்சநேரம் ஆகட்டும்; அப்புறம் வருகிறேன்” என்று அன்போடு கூறிவிட்டு அவ்வறையை விடுத்துச் சென்றாள்.
மேலும் ஒரு நாழிகை நேரம் கழிந்தது. நூர்ஜஹானால் பிரயோகிக்கப்பட்ட மருந்து நன்றாக வேலை செய்து மேனகாவின் உணர்வைத் திருப்பியது. தனக்கருகில் ஒர் அழகிய பெண்பாவை யிருந்ததைத் தான் கடைசியாகக் கண்ட நினைவும் அவ்வுணர்ச்சியோடு திரும்பியது. அந்த நினைவினால் அவளது அப்போதைய மனநிலை ஒரு சிறிது இன்பகரமாயும், நம்பிக்கை தரத்தக்கதாயு மிருந்தது. அந்தப் பெண் யாவளென்பதையும், மற்றும் எல்லா விவரங்களையும் அந்தப் பெண்மணியிடம் கேட்டறிந்து கொள்ள வேண்டு மென்னும் விருப்பமும் ஆவலும் உண்டாயின. அந்த மகமதியப் பெண், அன்றிரவு தன்னை வற்புறுத்திய மகம்மதியனுக்கு ஒருகால் அனுகூலமானவளாய் இருப்பாளோ என்னும் ஒருவகையான அச்சம் தோன்றி ஒரு புறம் அவள் மனதைக் கவர வாரம்பித்தது; இவ்வாறு நம்பிக்கையாலும், அவநம்பிக்கை யாலும் ஒரே காலத்தில் வதைக்கப்பட்டவளாய், நூர்ஜஹானது முகத்தை நோக்கினாள். அதுகாறும் அவளுடைய வாய், பூட்டப்பட்ட கதவைப்போலத் தோன்றியது. அப்போது, தான் பேசக்கூடுமென்னும் தைரியம் அவளது உணர்வில் தோன்றியது.