பக்கம்:மேனகா 1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

மேனகா


கோமளம்:- மரக்காயன் சிங்கப்பூருக்குப் போகுமுன் அவள் அவனிடம் இருப்பதை யாராவது கண்டுவிட்டால் என்ன செய்கிறது?

சாமா:- அவனுடைய வீடு பெருத்த அரண்மனையைப் போலிருக்கிறது. அதற்குள் போய்விட்டால், பிறகு வெளியில் வழியே தெரியாது. கோஷாக்கள் இருப்பதால் உட்புறத்தில் எவரும் போகக்கூடாது; அந்த மாளிகைக்குள் எத்தனையோ மறைவான இடங்களும், ரகசியமான வழிகளும் இருக்கின்றன. அதற்குள் யார் இருக்கிறார்கள் என்பதை அவன் ஒருவன் அறிவானேயன்றி, மற்றவருக்கு ஒன்றுமே தெரியாது. அதைப்பற்றிக் கவலையில்லை.

பெருந்தேவி:- வராகசாமிக்கு அவள் மேலிருக்கும் வெறுப்பை மாற்றி, அவளைத் திரும்ப அழைத்துக் கொள்வதற்கு அவன் இணங்கும்படிச் செய்யவேண்டும். அதுவரையிற் கறுப்பூர் சங்கதியை நாம் சொல்லக்கூடாது. பெண்ணின் அம்மானிடம் நாங்கள் இன்னம் பதினைந்து நாட்களில் கறுப்பூருக்கே வருவதாய்ச் சொல்லி அனுப்பிவை- என்றாள்.

அப்போது எவனோ வாசற்கதவை இடித்து, “போஸ்டு போஸ்டு” என்று உரக்கக் கூவினான். கோமளம் குதித்துக் கொண்டோடி ஒரு கடிதத்தை வாங்கிக்கொண்டு திரும்பி வந்தாள். அது வராகசாமி ஐயங்காருக்கு எழுதப்பட்டிருந்தது. அதன் உறையை மெதுவாக திறந்து கொண்டே வந்த கோமளம், “அடி! மேனகா தன் அகமுடையானுக்கு எழுதியிருக்காளடி! ஒரு வருஷமாயில்லாமல் இப்போது புருஷனுக்கு என்ன எழுதியிருப்பாள்?” என்றாள். உடனே பெருந்தேவி தன் வேலையை நிறுத்திவிட்டு, “அடி! சீக்கிரம் வாசி, வராகசாமி வந்து விடுவான்” என்று துரிதப்படுத்த, கோமளம் உடனே கடிதத்தைப் பிரித்துப் படித்தாள்.


❊ ❊ ❊ ❊ ❊
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/40&oldid=1248107" இலிருந்து மீள்விக்கப்பட்டது