பாய்வதன் முன் பதுங்குதல்
47
வராகசாமி முதலில் சிறிது நாணித் தயங்கினான். தன் மாமனாரிடம் தான் தாறுமாறாய்ப் பேசிய சொற்கள் நினைவிற்கு வந்தன. எனினும், மேனகாவின் கபடமற்ற குளிர்ந்த வதனம் அவனுடைய மனக்கண்ணில் தோன்றி அவனிடம் மன்றாடியது. அவன் உடனே கடிதம் எழுத, அதை சாமாவையர் எடுத்துப் போய் தபாற் பெட்டியில் போட்டு வந்தார்.
மறுநாள் தஞ்சையிலிருந்து தந்தி யொன்று வந்து சேர்ந்தது. வராகசாமி பதைத்து அதைப் பிரித்துப் பார்த்தான். டிப்டி கலெக்டரும் மேனகாவும் அன்றிரவே புறப்பட்டு மறுநாள் சென்னைக்கு வருவதாக அதில் எழுதப்பட்டிருந்தது.
❊ ❊ ❊ ❊ ❊
5-வது அதிகாரம்
பாய்வதன் முன் பதுங்குதல்
மேனகா திரும்பவும் தன் மணாளனது இல்லத்தை அடைந்து அன்றிரவு தனிமையில் அவனோடு பேசிய பின்னரே - இருவரும் ஒரு வருஷ காலமாக மனதில் வைத்திருந்த விஷயங்களை ஒருவருக்கொருவர் வெளியிட்ட பின்னரே - அவளுடைய மனப்பிணி அகன்றது. மங்கிக் கிடந்த உயிர் ஒளியைப் பெற்றது. எமனுலகின் அருகிற் சென்றிருந்த அவளுடைய ஆன்மா அப்போதே திரும்பியது. வாடிய உடலும் தளிர்த்தது. நெடிய காலமாய் மகிழ் வென்பதையே கண்டறியாத வதனம் புன்னகையால் மலர்ந்தது. விசனம் என்னும் முகில் சூழப் பெற்றிருந்த அழகிய முகத்தில் இன்பத் தாமரை பூத்தது.