கும்பிடும் கள்ளன்
75
அசட்டையாயிருக்க வேண்டாம். பெண் அகப்பட்டாளென்று மறு தந்தி வந்தாலன்றி இங்கே ஒருவருக்கும் ஒய்வுமிராது; ஒரு வேலையிலும் மனம் செல்லாது” என்றிருந்த சங்கதியைப் படித்தான். அவனுடைய நெஞ்சம் தடுமாறியது, குழம்பியது. கோபம் பொங்கி யெழுந்தது. என்ன செய்வான்? யார் சொன்னது உண்மை யென்பதை எப்படி அறிவான்? உடனே “அக்கா! அடி அக்கா!” என்று அதட்டிய குரலில் பெருந்தேவியை அழைத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான்.
❊ ❊ ❊ ❊ ❊
8-வது அதிகாரம்
கும்பிடும் கள்ளன்
நமக்கு நன்மைகளை அளிக்கும் விஷ்ணு, சிவன் முதலிய தெய்வங்களையும் நாம் கோயிலில் வைத்து வணங்குகிறோம்; தீமைகளைத் தரும் காட்டேறி, பிடாறி, மதுரை வீரன் முதலியவற்றையும் கோயிலில் வைத்துக் கும்பிடுகிறோம். ஆனாலும், தீமையைச் செய்யும் தெய்வங்களிடத்தில் நமக்குள்ள அச்சமும், மதிப்புமே மிக்க அதிகம். தீங்கற்றதும், நமது உணவிற்குப் பயன் படுவதுமான புடலங்காயை நாம் ஒரு பொருட்டாக எண்ணுவதும் இல்லை; அதை வணங்குவதும் இல்லை. ஆலகால விஷத்தை வாயிற்கொண்டு நம்மைக் கொல்ல ஆயத்தமாக இருக்கும் நாகப்பாம்பையே நாம் பெரிதும் நன்கு மதிக்கிறோம்; அதன் புற்றில் பால் தெளித்து அதை வணங்குகிறோம்; அதைக் கண்டு அஞ்சி ஒடுகிறோம். அவ்வாறே தஞ்சையை ஆண்ட தாசில்தார் தாந்தோனிராயருடைய அருமையான புகழை நாம் இனியும் பாடாது