22வது அதிகாரம்
வேம்போ கரும்போ
இராயப்பேட்டை வைத்தியசாலையில் மிகுந்த நீளமும் அகலமுமான கூடங்கள் பல இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் இருபது அல்லது இருபத்தைந்து இரும்பு கட்டில்கள் வரிசையாகப் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு கட்டிலிலும் ஒவ்வொரு நோயாளி படுத்திருந்தான். நோயாளிகளின் தேவைகளைக் கவனித்து அவர்களுக்குரிய பணிவிடைகளைப் புரியும் பொருட்டு ஒவ்வொரு அறைக்கும் இரண்டிரண்டு மாதர் நியமிக்கப்பட்டிருந்தனர். சென்னை வைத்திய சாலைகளில் அவர்கள் பெரும்பாலும் வெள்ளைக்கார (சட்டைக்கார) வகுப்பைச் சேர்ந்த யெளவன மடந்தையராகவே இருந்தனர். அவர்கள் நிரம்பவும் அழகுவாய்ந்த பக்குவகாலப் பெண்களாக விருந்தமையாலும், முகவசீகரம், அன்பு தளரா முயற்சி, சலியா உழைப்பு, இரக்கம் முதலிய அம்சங்களைத் தோற்றுவித்துத் தமது கடமைகளைச் செய்யவேண்டு மென்பது வைத்தியசாலையின் முறைமை யாதலாலும், சாதாரணமாக உலக நடவடிக்கைகளில், இந்திய மக்களோடு கூடிப்பழகாத வெள்ளைக்கார மாதர், இங்கு அன்பே வடிவாகக் காணப்பட்டு, பணிபுரிவது முற்றிலும் புதுமையா யிருத்தலினாலும் பிணியாளருக்கு அந்த ஸ்திரீகள் அமுத சஞ்சீவியோ, கந்தருவ மங்கையரோ, காமதேனுவோ, கற்பகத்தருவோ வென்னக் காணப்பட்டு காலத்திற்குரியவாறு உதவி புரிந்து இன்பங் கொடுத்து வந்தனர்; மருந்தினால்