பக்கம்:மேனகா 2.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

மேனகா


கோம:- புதிதாய் வரப்போகிறவள் எப்படி இருப்பாளோ! பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த கதையாய்ப் போகாமல், அவளாவது சரியாக இருக்க வேண்டுமே. இதுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது.

பெரு:- ஏனடா சாமா! எனக்கு ஒரு யோசனை தோன்று கிறது. அப்படியே செய்துவிடுவோமே? நம்முடைய வராகசாமியோ இப்போது முன்மாதிரி இல்லை. தானே வீட்டுக்கு எஜமான் என்பதை அவன் இப்போது காட்ட ஆரம்பித்து விட்டான். அதற்கு அநுகூலமாக புதுப் பெண்டாட்டியும் அவனுக்குத் தலையணை மந்திரோபதேசம் செய்பவளாயிருந்தால், நம்முடைய ஆட்டம் ஒடுங்கிப் போகும். ஆகையால், அவர்கள் இரண்டு பேரையும் நாம் மருந்தினாலாவது, மந்திரத்தினாலாவது வசியப்படுத்தி விடுவோம். நைனா முகம்மது வீட்டுக்கு வந்த மலையாளத்து மந்திரவாதியை அழைத்துக் கொண்டு வருகிறாயா? அவனுக்கு நூறு இருநூறு கொடுத்துக் காரியத்தை முடித்துக்கொள்வோம்.

கோம:- (சந்தோஷமடைந்து) ஆமடி; அதுதான் நல்ல யோசனை; அப்படியே செய்துவிடுவோம். பின்னால் மேனகாவின் சங்கதி வெளியானால்கூட வராகசாமி நம்மை ஒன்றும் செய்யமாட்டான். நாம் சொல்வதைப்போல அடங்கி நடப்பான்.

சாமா:- இந்த யோசனை எனக்கு இரண்டு நாளைக்கு முன்னதாகவே தோன்றியது. உடனே நான் நைனா முகம்மதுவின் வீட்டுக்குப் போயிருந்தேன்; அவன் வீட்டில் இல்லையென்று சொல்லிவிட்டார்கள். மந்திரவாதி அங்கே காணப்படவில்லை. வேறு எங்கே இருக்கிறானென்பதும் தெரியவில்லை; இன்னொரு தரம் போய் விசாரித்துப் பார்க்கிறேன். இனிமேல் வராகசாமி வந்துவிடப் போகிறான். நாம் எந்தக் காரியத்தையும் ஜாக்கிரதையாகச் செய்யவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/243&oldid=1252419" இலிருந்து மீள்விக்கப்பட்டது