பரதனும் பாதுகையும்
37
ஸ்ரீ ராமருடைய பாதரட்சையைப் பற்றி ஒரு கதை உண்டு. ரொம்பவும் சுவாரசியமானது.
ஸ்ரீராமர் பதினாலு வருஷம் வனவாசம் செய்வதற்காகக் காட்டுக்குச் சென்றாரல்லவா? அப்போது பரதன் அயோத்தியில் இல்லை. திரும்பி வந்து கைகேயியிடம், "அம்மா, என் அண்ணன் எங்கே?" என்று கேட்டான்.
கைகேயி நடந்த விஷயத்தைச் சொல்லி, பரதா, நீதான் இனி ராஜ்யத்தை ஆளவேண்டும்" என்றாள்.
உடனே பரதன் அண்ணன் ராமனைத் தேடிக்கொண்டு, காட்டை நோக்கி விரைந்தான். ஸ்ரீராமனை அயோத்திக்கு அழைத்து வந்து மகுடாபிஷேகம் செய்து வைக்க வேண்டுமென்றா? ஒரு நாளுமில்லை.
அயோத்தி பரதனுடைய நாடாகி விட்டது. இனி ராமனைப்பற்றி என்ன கவலை?
ஸ்ரீராமர் காட்டுக்குப் போகும்போது, தன் காலிலே பாதரட்சையை அணிந்து கொண்டு போய்விட்டார். அந்தப் பாதரட்சை வெறும் மரத்தினால் செய்யப்பட்டதா? அல்லது சப்பாத்திக் கட்டையா?
பத்தரை மாற்றுத் தங்கத்தினால் செய்யப்பட்ட பாதுகை அது. அந்தத் தங்கப் பாதுகை அயோத்திக்குச் சொந்தம். அயோத்திமா நகரம் பரதனுடையது. பார்த்தான் பரதன். தன்னுடைய அயோத்தியிலிருந்து போன அந்தப் பொன் பாதுகையை ராமனிடமிருந்து தந்திரமாக அடித்துக்கொண்டு வந்துவிட வேண்டும். பிறகு ராமன் எக்கேடு கெட்டால் என்ன?
பரதன் இதற்கு ஓர் உபாயம் செய்தான். ராமரைப் போய், "அண்ணா! தாங்கள் அவசியம் அயோத்திக்குத் திரும்பி வந்து ராஜ்ய பாரம் ஏற்க வேண்டும்" என்றான்.
ராமர் கண்டிப்பாய் முடியாது என்று தலையசைத்து விட்டார். பரதன் ஒரு பாட்டுக்கூடப் பாடிப் பார்த்தான். ராமர் பதில் பாட்டுப்பாடி "வர முடியாது" என்று சொல்லிவிட்டார்.