பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

29

காக்கஸஸ் மாநிலத்திலே வாழும் மக்களுக்கு கஸ்ஸாக்குகள் என்று பெயர். அவர்கள் மலைவாழ் மக்கள். கள்ளம் கபடமறியாத சூதுவாதற்ற ஜனங்கள் எளிமையாக வாழ்பவர்கள். அவர் பார்வை பாயும் மலைப்பகுதி இடங்களில் எல்லாம் பசுமைத் தோற்றங்களே அழகுக்கு அழகாகத் தோற்றமளித்தன.

இத்தகைய ஓர் அருமையான இடத்திலேதான் ‘ஸ்டாரியும்’ என்ற ஒரு குன்றம் சூழ்ந்த நகர் இருந்தது. அந்த இடத்திலேதான், ருஷ்ய நாட்டிலே உள்ள நோய்வாய்ப்பட்டோர் மலை சுவாச ஆரோக்கிய வாழ்வுக்காக வந்து தங்குவார்கள். காரணம், அப்படிப்பட்ட இயற்கை சூழ்ந்த ஒரு பிரதேசம் அது.

இந்த இடத்தைக் கண்ட டால்ஸ்டாய் அங்கேயே தங்கி விடலாம் என்ற முடிவுக்கு வந்தார். இதை தம்பியிடமிருந்து அறிந்த நிகோல்ஸ், அவரை, அங்கேயே தங்கியிருக்குமாறு கூறி விட்டுத் தனது வேலைக்குச் சென்றார்.

டால்ஸ்டாய் அங்கே ஒரு குடிசையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தங்கினார். எளிய வாழ்க்கை வாழ்ந்ததுடன், அங்கிருந்தே தனிமையாக தனது படிப்பைத் தொடங்கினார்! அவர் மிகவும் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஓடியாடி குதுகலமாக இருந்தார் பொழுதும் நாளும் போவது தெரியாமலேயே இயற்கைக் காட்சியின் அழகுகளை ரசித்த வாறே நாட்களை ஓட வைத்தார்!

ஆனால், வேலை ஏதுமில்லாமல் காலம் தள்ளுவது வாலிபத்துக்கு அழகா? என்று மனம் கலங்கினார்!

அண்ணன் நிக்கோலஸ் தம்பியைப் பார்த்துப் போக மீண்டும் அங்கே வந்தார். தம்பியின் மன உளைச்சலைக் கேட்டு ஆறுதல் கூறினார். அதனால், டால்ஸ்டாயையும் ராணுவப் பணியில் சேர்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்தார்.