பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

லியோ டால்ஸ்டாயின்

இந்த எழுத்துப் பணிகளால் உருவான கட்டுரைகள் ‘சாப்ரோ மேனிக்’ என்ற பத்திரிக்கையில் குழந்தைப் பருவம் என்ற பெயரில் தொடர்ந்து வெளிவரலாயின. டால்ஸ்டாய் கட்டுரைகளைப் பத்திரிகை ஆசிரியர்கள் படித்து, உணர்ச்சி உந்தி அவரும் அவற்றை முதலிடம் கொடுத்து வெளியிட்டார்.

டால்ஸ்டாய் எழுத்துக்களால் உருவான குழந்தைப் பருவக் கட்டுரைகள் தான் அவரை ஒரு உணர்ச்சிமிகுந்த எழுத்தாளராக்கிற்று எனலாம். கட்டுரைகள் தொடர்ந்து பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருந்ததால், அவருக்கு உற்சாகம் அதிகமாயிற்று. அதனால் ஓய்வு கிடைக்கும் போது எல்லாம் பத்திரிகைக்கு எழுத ஆரம்பித்து விட்டார்.

‘குழந்தைப் பருவம்’ என்ற கட்டுரைகளுக்குப் பிறகு, நிலச்சுவான்தாரின் காலை நேரம், இளம் பருவம், இளமை என்ற கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தார். மக்கள் அவரது கட்டுரைகளைப் படித்து வர வேற்றார்கள். அதனால் அவரது எழுத்தார்வம் மட்டும் மேலும் மேலும் வளர்ந்தது வளர்ந்து கொண்டே வந்தது.

ஒரு பக்கம் குண்டுகள் வெடித்துக் கொண்டே இருக்கும்! மறுபுறம் பீரங்கித் தாக்குதலின் ஓசைகள் கேட்டுக் கொண்டே இருக்கும். அப்போதெல்லாம் டால்ஸ்டாய் செபாஸ்டபூல் கதைகள், என்ற சிறுகதைகளை எழுதிக் கொண்டே இருந்தார். இந்த எழுத்துக்களின் உணர்ச்சிகளை மக்கள் ஆர்வத்துடன் படித்துப் பெரிதும் பாராட்டினார்கள். பொதுவாக ருஷ்ய நாட்டில் லியோடால்ஸ்டாய் என்றால் யார்? எப்படிப்பட்ட ஓர் எழுத்தாளர் என்பதை மக்கள் நன்றாகப் புரிந்துகொள்ளும் நிலை உருவாகிவிட்டதால் பெயரும் புகழும் ஏற்பட்டு விட்டது.