பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

வரலாற்றுக்கு முன்



தமிழ் நாட்டு எல்லைக்கு அப்பாலிருந்து சிறந்த படையை உடைய கோசர் என்பார், பொதியிலின் பக்கத்திலிருந்த பலரையும் வென்று, தம்மடிப்படுத்தினர். அது காலை ஆண்டு ஒரு பக்கத்திலிருந்த மோகூர் மன்னன் பணியவில்லை. அவனை வெல்லும் ஆற்றல். தமக்கு இல்லாமையைக் கண்ட கோசர், வேற்றவர் துணையை நாடினர். அதே வேளையில் தமிழர்மேல்—தம் மாற்றலர் நண்பர்மேல்—பழி தீர்க்க நினைத்த சந்திர குப்தர் மைசூர் எல்லையில் வந்து தங்கியிருப்பர். அவர் செல்வத்தையும் படை வலியையும் கோசர் கேள்வியுற்றிருப்பர். எனவே, அவரை அழைத்திருக்கலாம் காலம் பார்த்திருந்த அவரும் துணை செய்திருக்கலாம். அவரே பொதியில் வரையில் வந்தார் என்று கொள்ள வேண்டுவதின்று. அவருடைய படைகள் அனுப்பப்பட்டிருக்கலாம். அப்படையுடன் கோசர் வந்து மோகூரைப் பணிய வைத்திருக்கலாம். எனினும், அவர்கள் நெடுங்காலம் தமிழ்நாட்டில் தங்கினார்கள் என்றோ, அன்றி ஆண்டார்களென்றோ கூறுதல் இயலாது. நாட்டின் நிலையும் மக்கள் எழுச்சியும் அவர்களைப் பிறகு விரட்டி அடித்திருக்கக் கூடும். எனினும், அவர்கள் துணையுடன் தமிழ் நாட்டில் வந்த 'கோசர்' நிலைத்துத் தங்கி விட்டனர் என்பது நன்கு தெரிகின்றது.[1] திரு. இராக வையங்கார் அவர்கள் தம் ஆராய்ச்சி நூலில் சந்திர குப்தர் மகிஷ மண்டலமாகிய மைசூர் நாட்டில் சிரவணவேள் குளத்து (சிரவணபெலகோலா)த் தங்கினார் என்பதையும் காட்டுகின்றார்.[2]

திரு. இராகவையங்கார் அவர்கள் மதுரைக் காஞ்சி அடிகளையும் அகநானூற்று (251) அடிகளையும் ஒன்றாக


  1. கோசர். ஒரு சிற்றாராய்ச்சி— ரா. இராகவையங்கார் (அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பதிப்பு, 1951.)
  2. ௸ ப. 17.