பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

வர்ணாஸ்ரமம்


கும் ஆற்றலரசர். ஆயினும், அவரைத் தென்னாட்டுத் தாகூர் என்று கூறேன்! ஏன் கூறல் வேண்டும்? இவர், எந்நாட்டுவீரர், தமிழகத்தின் தளபதி. தாகூருக்கு வங்கத்திலே, பங்கம் விளைவிக்கக் கொடுங்கையில் வஞ்சனை வாளேந்தினோர் எவருமில்லை! தாகூரின் நாதநடையினைக் கண்டதும் சங்கை கொண்டோர், வங்கத்திலே இல்லை! அவர்மொழி, வங்க மக்கள் எவரின் விழியிலும் களிப்புத் துளி எழச் செய்ததேயன்றி, காய்ச்சலும் குளறலும், எழச் செய்யவில்லை. வங்கம் தாகூரை, உச்சிமோந்து முத்தமிட்டு, வாரி அணைத்து வாஞ்சனையுடன் கொஞ்சிற்று. இங்கோ? எவ்வளவு எதிர்ப்பு, எத்துணை வஞ்சனை, எவ்விதமான சதிகள்! பழி எத்துணை, பதைப்பு எவ்வளவு! சிங்கமென முழக்கமிட்ட சண்முகத்தைச் சீறிக் கடிக்கச்சென்ற செந்நாய்க் கூட்டமும், பாய்ந்து. பிடுங்கச்சென்ற ஓநாய்களும், நகைமுகங்காட்டி பகைச் செயல்புரிந்த நரிக்கூட்டமும், கொஞ்சமா? வங்கம், தாகூரை உயர்த்திடக் கண்டோம். தமிழகத்திலோ, சர் சண்முகத்தைச், சாணக்கியர்களும் குடிலர்களும் சாய்த்திட ஜல்லடம் கட்டியதையும், சரங்கள் பல தொடுத்ததையும் கண்டோம். வங்கத்தின் அணைப்பிலே, கவி தாகூர் வளர்ந்தார் ! தமிழகத்திலே தருக்கரின் எதிர்ப்பிலே, தழைத்தது கொங்குநாட்டு வேங்கை! தாகூர், மாசு மருவற்ற வானத்திலே உலவிய முழுமதி; சர் சண்முகம், முகிலைக் கிழித்தெறிந்த முழுமதி ! இத்தமிழரைக், கவியுடன் ஒப்பிட நான் ஒப்பேன்!

கண்டனங்கள் எழுதி அலுத்த கரங்களும், கேலிப்-