பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

23


தன்மையும் ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால், அவரைத் தலைவராகக்கொண்ட கட்சியும் அதனைச் சார்ந்துள்ள மக்களும், முன்னேற்றமடைய முடியுமென்பது திண்ணம். அரண்மனை மாடியிலே அம்சதூளிகா மஞ்சத்திலே அமர்ந்துள்ள அரிவையை அடைய வேண்டி, ஆங்குச் சென்ற ஆணழகன், அகழியின் ஆழத்துக்கோ அதிலே அலையும் முதலையின் வாய்க்கோ அஞ்சினால், யாங்ஙனம் மங்கையைப் பெறமுடியும்! இலட்சியமெனும் எழிலுடையாளைப் பெற்று இன்புற எண்ணுவோரிற் பலர், அகழிக்கு அஞ்சி, புறத்தே நின்று புகைபடு மனமுடன் போரிட்டுக் கொண்டோ, புலம்பியோ கிடப்பர். ஒரு சிலருக்கே, உழவுக்கேற்ற விளைவு எனும் மொழிவழி நடக்கும் அறிவாற்றலுண்டு. அவர்தமைச் சலிப்பு அண்டாது. சாகசத்துக்கு அவர் பலியாகார். போலியைக் கண்டு ஏமாறார். புல்லரின் புன்மொழி கேட்டுப் புழுங்கார். தாக்கிய வேலினைத் தூக்கி யெறிந்துவிட்டுப், போர்க்குப் புகின் யார்க்கும் இது நேரல் முறையே என்பது தெரிந்து புலியுடன் போரிடுகையிலே, கிலி எனும் வலி கொளல்கூடாது. என்பதறிந்து, உயிர் கெடும்வரை, நெடு வரை போல் நின்று போரிடுவர் வீரர். கட்சிப் பணியும், களத்துப் பணி போன்றே, வீரருக்கு ஏற்றதேயன்றி, விலாவிலே விரக்திப்புழு நடமாடுவோருக்கோ, மனத்திலே சுயநலமெனும் குளவி கொட்டிடுவோருக்கோ ஏற்றதன்று. சிறுசெயல் புரிய மட்டுமே தெரிந்தோர்க்குப் பெருநெறி பிடித்தலரிது. கட்சிப் பணிக்கு இத்தகைய கடமையுணர்ந்த காவலர் தேவை. அதிலும், தூங்கிடும் இனத்தைத் தட்டி எழுப்பிடும் பணி, சாமான்யமான-