பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


இரப்போர்க்கு இல்லையென்னாது வழங்கிவந்த ஒரு பெருமகனுக்கு உண்ண உணவு இல்லாது வருத்தும் துன்பத்தைவிட, வழங்கப் பொருளில்லாது வருத்தும் துன்பம் மிகந் பெரியதாக விருக்குமாம். பிறருக்கு வழங்கப் பொருளில்லாது வருந்தும் நல்குரவை வள்ளுவர் "அறஞ்சாரா நல்குரவு" என அறிமுகப் படுத்துகிறார். அறஞ்சாரா நல்குரவைப் பெற்று வாடி வதங்கும் ஒருவனைப் பெற்ற தாயும் தன் பிள்ளையென நினையாளாம். பிறரைப் போல எண்ணி ஒதுக்கி விடுவாளாம். அவனது சொல்லிலும் சோர்வு காணப்படுமாம். இவையனைத்தும் வள்ளுவர் கருத்துக்கள். இவற்றை எண்ணிப் பார்க்கும்பொழுது, கொன்றது போலும் நிரப்பு நம்மையும் கொன்றுவிடும் போலத் தோன்றுகிறது.

நல் வழியிற் பொருளைத் தேடி நல்லோர்க்கு வழங்கி வந்த ஒரு நன்மகன் வறுமையடைந்ததும், வருகிறவர்களுக்கு வழங்க முடியாமற் போயிற்றே என்று எண்ணுந் துன்பம், பிறரது துன்பத்தைப் போக்க முடியாமல் வாழ்கின்ற வாழ்வு என்ன வாழ்வு என்று எண்ணுந் துன்பம், பலநாள் வழங்கிவந்த நான் இல்லையென்று இப்பொழுது எப்படிக் கூறுவது என்று என்னுந் துன்பம், நாம் வறுமைப்பட்டோம் என்பதை நல்லறிஞர் அறிந்தால் நம்மிடம் வராமற் போய்விடுவார்களே என்று வருந்துந் துன்பம், வந்தாலும் வழங்க முடியாதே என எண்ணி வாடுந்துன்பம் ஆகிய அனைத்தையும், "கொன்றது போலும் நிரப்பு" என்ற சொற்றொடர், தன்னுள் நிரப்பிக் காட்டி கொண்டுதானிருக்கிறது.

"மாணம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், முயற்சி, தாளாண்மை, சிற்றின்பம் ஆகிய பத்தும் பசி வந்திடப் பறந்து போம்" என ஒரு புலவர்