பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

பொழுதும் யாவர்க்கும் எந்த அன்விலும் இன்னா செய்யாமையே தலையாய அறம். "பிறர் தனக்குச் செய்த இன்னாதனவற்றை ஒருவன் பிறனுக்கு முன்னே செய்யின் அதுவே அவனுக்குப் பின்னே வந்து சேரும்" என்ற க்ருத்துக்களை ஒன்பது குறள்களாற் கூறி, வள்ளுவர் இறுதிக் குறளாகிய இக்குறளில், "ஒருவன் செய்த நோய் அவனை வருத்தும், ஆதலின் நோயில்லாமல் வாழ விரும்புகிறவர்கள் பிறருக்கு நோய் செய்ய மாட்டார்கள்" என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

"நிலத்தில் அறைந்தவன் கை வலி எடுக்கத் தப்பாதது போல, பிறருக்குத் துன்பஞ் செய்தவன் அத்துன்பத்திலிருந்து தப்ப முடியாது" என முன்னொரு குறளிற் கூறியிருந்தார். அக் குறளிலிருந்து அறையப்பெற்ற நிலத்திற்கு சிறு அதிர்ச்சியும், அறைந்தவனது கைக்கு பெரும் வலியும் உண்டாகும் என அறிந்தோம். என்றாலும் அதனதன் பங்கு "எவ்வளவு இருக்கும்?" என்று ஐயுறுவதை நோக்கியே, இக் குறள் கூறப்பெற்றிருப்பதாகத் தோன்றுகிறது.

ஒருவன் பிறருக்கு இன்னா செய்தால், செய்தவனுக்கு 99 பங்கு துன்பமும், செய்யப் பெற்றவனுக்கு ஒரு பங்கு துன்பமும்கூட இல்லை. 100 பங்கு துன்பமும் செய்தவனுக் கேயாம் என்று இக்குறள் கூறுகிறது. இவ்வுண்மையை, இக்குறளிலுள்ள "நோய் எல்லாம்" என்ற இரு சொற்களில் கண்டு மகிழுங்கள்.

"ஒருவனுக்குத் தான் செய்த கொடுமை உடனே தனக்கு வராவிடினும், பின்பொருகால் உறுதியாக வந்து சேரும்" என்ற கருத்தையும், "இக்குறளிலுள்ள ஆம்" என்ற சொல் ஆகும் என்ற பொருளில் நின்று காட்டிக்கொண்டிருக்கிறது.