பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107


ஆனால் அடிகள் தம் பயணத்தை நிறுத்தவில்லை. உடனே அவ்வூர் மக்கள் தம் செயலுக்காக வெட்கி, அடிகளை உந்து வண்டியில் ஏற்றி அடுத்த ஊரில் சேர்த்தனர்.

ஒருமுறை குஜராத்தி கலைமன்றத்தில் அடிகள் பேசவேண்டி இருந்தது. அடிகளின் ஆசிரமத்திலிருந்து அம்மன்றம் இரண்டு கல் தொலைவில் அமைந்திருந்தது. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் மன்றத்தினர் வண்டி ஏதும் அனுப்பவில்லை. கூட்டம் துவக்க இன்னும் கால்மணி நேரமே இருந்தது. அடிகள் உடனே கால்நடையாகப் புறப்பட்டு விட்டார். எதிரில் அவருக்குத் தெரிந்த ஒரு மனிதர் மிதிவண்டியில் வந்து கொண்டிருந்தார். உடனே அம்மனிதரிடம் மிதிவண்டியைச் சிறிது நேரம் இரவல் கொடுக்குமாறு கேட்டார். அம் மனிதர் மிகவும் வியப்படைந்தவராய், மிதி வண்டியை அடிகளிடம் கொடுத்தார். அடிகளும் மிதிவண்டி யூர்ந்து குறிப்பிட்ட காலத்தில் கலை மன்றத்தை அடைந்தார். இடையில் கட்டிய ஒரு முழத் துண்டோடு, திறந்த மேனியராய் அடிகள் மிதிவண்டி யூர்ந்து வந்த காட்சி எல்லோரையும் திகைப்பிலாழ்த்தியது. ஏனென்றால் அடிகள் மிதி வண்டியூர்ந்து சென்ற காட்சியை இந்திய நாட்டில் யாரும் கண்டதில்லை.