பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

கொள்கை. ஆனால் எனது கொள்கை இதற்கு முற்றிலும் மாறுபட்டது. ஏசுநாதரை நான் தியாக மூர்த்தி என்றும், வாய்மைக்காக உயிர் துறந்த பெருந்தகை என்றும், கடவுள் தன்மை பொருந்திய சமயகுரவர் என்றும் ஒப்புக்கொண்டேன். ஆனால், உலகிலேயே இதுகாறும் பிறந்தவர்களுள் ஏசு நாதர் ஒருவரே ‘மகான்’ என்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. சிலுவையில் அவர் உயிர் நீத்தது உலகுக்கு ஓர் அரிய எடுத்துக்காட்டாகும். ஆனால் அதில் எல்லை மீறிய விந்தை ஏதும் இருப்பதாக என் உள்ளம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏசுநாதரைப் போலத் தூய வாழ்வும் தன்னல மறுப்பும் கொண்ட பெரியார்களும், விந்தைகளை நிகழ்த்திய மகான்களும் எல்லாச் சமயத்திலும் இருந்திருக்கின்றனர். கிருத்தவ சமயத்தில் பாவிகள் நல்லோர்களாவது குறித்து நான் கேள்விப்பட்டதுபோலவே மற்றச் சமயங்களிலும் மக்கள் சீர்திருந்தியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். தத்துவத் துறையில் பார்க்குங்கால், கிருத்தவ மதக் கொள்கைகள், பிற மதக் கொள்கைகளை விட உயர்ந்தவை என்று கூறி விட முடியாது. தன்னல மறுப்பை முன்னிட்டுப் பார்க்கையிலோ, இந்துக்கள் கிருத்தவர்களிலும் பெரிதும் மேம்பட்டவர்கள் என்று தோன்றிற்று. கிருத்தவ சமயத்தை முழுதும் நிறைவு பெற்ற சமயம் என்றோ, எல்லாச் சமயங்களிலும் தலைசிறந்த தொன்றென்றே என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

‘ஆனால், இந்து சமயமும் முழுதும் நிறைவு பெற்ற சமயமென்று நான் உறுதியாகக் கூற முடி-