1. கவிஞர் முடியரசன் செட்டிநாட்டுக் கவிஞர்களுள் தலையாயவர், மதுரை மாவட்டம் பெரிய குளத்தில் பிறந்தவர் 1920). அடியேனைப் போலத் தெலுங்கு பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர். துரைராஜ் என்பது பெற்றோரால் இடப்பெற்ற பெயர். அழுத்தமான தமிழ்ப் பற்றின் காரணமாக அப்பெயரை முடியரசன் எனத் தமிழாக்கிக் கொண்டார். மேலைச் சிவபுரிக் கணேசர் செந் தமிழ்க் கல்லூரியில் தமிழை மிக்க ஆர்வத்துடன் கற்று அழுத்தமான புலமை அடையப் பெற்றவர் அடியேன் காரைக்குடியில் பணியாற்றிய காலத்தில் 1950-86) இவருடன் பழகியுள்ளேன். இவர்தம் கவிதையுள்ளத்தை நேரில் கண்டுள்ளேன். இவர்தம் பாடல்களை இவரே உணர்ச்சியுடன் பாடக் கேட்டு மகிழ்ந்ததும் உண்டு. நகரச் சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று. காரைக்குடியிலேயே இல்லம் அமைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர். இளமையிலேயே கவிதை ஊற்று இவர் உள்ளத்தில் தோன்றியிருத்தல் வேண்டும். கருவிலேயே திருவுடையவராதலால், படிப்பும் அநுபவமும் அந்த ஊற்றை வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஒடச் செய்திருக்க வேண்டும். தம் வாழ்நாளில் பாரதிதாசனைத் தந்தையென்றும் பாரதியாரைப் பாட்டன் என்றும் உரிமையோடு குலமுறை கிளத்தும் கொள்கையுடையவராகத் திகழ்பவர். அவர்களைப் போல் பரம்பரை உணர்வுடன் திகழ்பவர். பழைய இலக்கிய மரபுகளைக் கற்றுப் போற்றி அந்த மரபுகள் வழி நின்று கவிதைகளைப் படைத்து 'வாழையடி வாழை எனப் போற்றிடும் கவிஞர் கூட்டத்தில் முன்னணியில் நிற்பவர்களில் ஒருவராகத் திகழ்பவர். இலக்கண வரம்பை மீறி இவர்தம் கவிதைப் படைப்புகள் தோன்றா. பாரதிதாசனைப் போலவே இவர் பாடிய கவிதைகளின் தலைப்பில் "நிலை மண்டில ஆசிரியப்பா, எண் சீர் விருத்தம், அறு சீர் விருத்தம், நேரிசை ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, கலி வெண்பா, தாழிசைகள், பதினாறு சீர்ச் சந்த விருத்தம், வெண் கலிப்பா, பஃறொடை வெண்பா " என்று யாப்புகளின் தலைப்புகளைக் குறிப்பிடுவதை