பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10. அறிவறிந்த மக்கட்பேறு

மங்கலமாகியது இல்லற வாழ்க்கை. சிறந்த இல்லற வாழ்க்கையின் பயன் மக்கட்பேறு, இதனைத் திருக்குறள்,

        "பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
         மக்கட்பேறு அல்ல பிற"

என்று எடுத்துக்கூறி விளக்குகிறது. இந்த உலகில் பல்வேறு பேறுகள் உள்ளன. அவற்றுள் சில பொன், பொருள் போகம், புகழ், மக்கட்பேறு முதலியன. இவை யாவற்றுள்ளும் சிறந்தது மக்கட்பேறு. ஏன்? முன்னே சொன்ன பொன், பொருள், போகம், புகழ் ஆகியவற்றுள் ஒன்றைப் பெற்றாலும் சரி, பலவற்றைப் பெற்றாலும் சரி வாழ்க்கையும் முழுமை ஆகாது. அதோடு மானுட இயக்கத்தின் தொடர்ச்சிக்கு அரண் செய்வதாகவும் ஆகாது.

ஆதலால் இல்வாழ்வார் பெறக்கூடிய பேறுகளுள் தலையாயது மக்கட்பேறேயாம். மானுட இயக்கத்தின் வளர்ச்சிக்கும் ஆக்கத்திற்கும் துணை செய்வது மக்கட்பேறே. அதோடு தத்துவ இயல்வழி ஒரு உயிர் மானுடப்பிறப்பு எய்தினால்தான் அமரநிலை எய்துகிறது. அதனாலேயே "பெறுமவற்றுள் யாமறிவதில்லை" என்று தெளிவாகவும் உறுதியாகவும் கூறுகிறார் திருவள்ளுவர்.

"அறிவறிந்த மக்கட் பேறல்ல பிற" என்ற பகுதி, கவனமாகப் படிக்க வேண்டிய பகுதி. இந்தப் பகுதிக்கு உரை ஆசிரியர்கள் எழுதியுள்ள உரைகள் அறிவுக்கு இசைந்தவனாக இல்லை. 'அறிவறிந்த' என்றதனால் இறந்த காலமாகிறது. எப்படி ஒரு மகன் அல்லது மகள் பிறக்கும் பொழுதே அறிவு அறிந்த குழந்தையாக இருக்க இயலும்? முடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/32&oldid=1133014" இலிருந்து மீள்விக்கப்பட்டது