80
வாழ்க்கை நலம்
பொறுத்தாற்றும் பண்பை வளர்த்து உறுதிப்படுத்துவது நம்மை வளர்த்துக் கொள்வதேயாகும். வலிமை, தூய்மை யாரிடம் இருக்கிறதோ அவர்களை எந்தஇழிவும் சென்றடையாது. அவதூறுகள் நெருப்பிடை வீழ்ந்த உமியெனக் கருகிப்போம். சிலர் கோழை என்றுகூறி ஆறுதல் பெறுவர். அதனால் நமக்கென்ன குறை?
குப்பை கூளம் இல்லாத இடத்தில் நெருப்பு பற்றி எரியுமா என்ன? ஆதலால் பொறுத்தாற்றும் பண்பைப் பெற வலிமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்; தூய்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தகுதிகள் பல வற்றையும் முயன்று அடைய வேண்டும்.
இப்படி வளர்ந்த நிலையில் காட்டும் பொறுமைதான் பொறுமை; வலிமை சார்ந்த பொறுமை. தகுதி மிகுதியும் உடையோரின் பொறுமையே வாழ்வளிக்கும்; வையகத்தின் வரலாற்றை இயக்கும் திருக்குறள்,
"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்."
என்று கூறி வழி நடத்துகிறது.
ஆம்! மற்றவர் பழிதுாற்றினால் அதனால் உண்மையில் விளைவது; தகுதியில்லாதவராக இருந்தால் சினம், பகை, கலகம்; தகுதிமிகுதியும் உடையோராக இருந்தால் திருத்தம் காண முயற்சி செய்வர்; பழிதுாற்றுவாரையும் வாழ்த்துவர்.
பரபரக்க வேண்டாம்; உணர்ச்சி வேண்டாம்; தேர்ந்து தெளிக! குப்பைகள் அகற்றப்பட வேண்டியவையே! குப்பைகள் உடைய இடங்கள் அகற்றப்படுவன அல்ல; அகற்றவும் இயலாது. குற்றங்களைத் திருத்துக. பயன் கொள்ள முயலுக. இவ்வழி பொறுத்தாற்றும் பண்பு வளரும்; நாளும் குற்றங்களிலிருந்து விடுதலை பெறுக; வளர்க; வலிமை பெற்றுயர்ந்திடுக; தகுதிகள் பலவும் பெற்று உயர்ந்திடுக. எல்லாரும்- அணைவர். கூடி வாழ்ந்திடலாம். கோடி நன்மை பெறலாம்.